வாரிசு சான்றிதழ்.. மதுரை அம்பிகா தியேட்டருக்கு வர சொன்ன விஏஓ இந்திரா.. பொறியில் சிக்கியது எப்படி?
மதுரை: மதுரை விராதனூர் பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி தனது கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை விற்க வாரிசு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.2-வது முறையாக முருகேசுவரி வாரிசு சான்றிதழ் கேட்ட போது, கிராம நிர்வாக அலுவலர் 18000 லஞ்சம் கேட்டாராம். இந்த விவகாரத்தில் பணம் கொடுக்காமல் புத்திசாலித்தனமாக முடிவெடுத்த முருகேஸ்வரி, விஏஓவை கையும் களவுமாக சிக்க வைத்தார்.
அரசு ஊழியர்கள் சிலர் வேலையை முடிக்காமல் காலம் தாழ்த்துவதும், சிலர் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலையை உடனே முடிக்க ஆர்வம் காட்டுவதும் நடக்கிறது. அப்படி செயல்படும் அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டிவிட முடியும்.

ஆனால் பலர் கேட்கும் லஞ்ச தொகையை கொடுத்துவிட்டு காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பவர்களுக்கே சில அரசு ஊழியர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். இப்படி லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது புகார் அளித்தால் கண்டிப்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் மதுரை விஏஓ சிக்கியிருக்கிறார். இதுபற்றி பார்ப்போம்.
மதுரை விராதனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி முருகேசுவரி. கணேசன் கடந்த 2019-ம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்க வாரிசுச் சான்றிதழ் கேட்டு முருகேசுவரி விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் அப்போது நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.
2-வது முறையாக முருகேசுவரி வாரிசு சான்றிதழ் கேட்டு, விராதனூர் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவை (வயது 46) அணுகி உள்ளாராம். அப்போது விஏஓ இந்திரா, வாரிசுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் ரூ.18 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத முருகேசுவரி, தன்னிடம் லஞ்சம் கேட்ட விஏஓவுக்கு பாடம் புகட்ட விரும்பினார். இதுதொடர்பாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், டிஎஸ்பி சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசுவரியிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.
அதன்பேரில் முருகேசுவரி, கிராம நிர்வாக அலுவலர் இந்திராவை தொடர்பு கொண்டபோது அவர் ரூ.18 ஆயிரத்துடன், மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகே வரும்படி கூறியுள்ளார். அந்த சமயத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் அங்கு மறைந்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசுவரியிடம் இருந்து இந்திரா வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவை கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications