கூட்டணியை பாஜக முறித்து கொள்ளும் வரை தொடர்வோம்.. "INDIA” நல்லாதானே இருக்கு.. ஓபிஎஸ் சொன்னதை பாருங்க!
மதுரை: பாஜக கூட்டணியில் தான் நீடிப்பதாகவும் அவர்களாக கூட்டணியை முறித்துக் கொள்ளும் வரை கூட்டணியில் தொடர்வோம் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அவர் வரவேற்று இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டு இருந்தேன். மணிப்பூரில் ஆதிவாசி பெண்களுக்கு நடந்தது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தின் உரிய கடமையாகவும் மத்திய அரசின் கடமையாகவும் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாங்கள் கருத்துக்களை எடுத்து வைக்க போகிறோம். திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் முதல்வராக ஸ்டாலினை ஆக்குவோம் என பேசியது குறித்து கேட்கிறீர்கள்... இது சீனிவாசனிடம் கேட்க வேண்டிய கேள்வி. அவர் எங்கிருந்தாலும் வாழ்க... என்.டி.ஏ கூட்டணி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் செல்லவில்லை" என்றார்.

அப்போது செய்தியாளர்கள் ஒருங்கிணைப்பாளராக நீங்கள்தானே நீடித்து வருகிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், உங்களுக்கு புரிந்து இருக்கிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்" என்றார். பாஜக கூட்டணியில் தான் இன்னும் இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, "அவர்களாக (பாஜக) முறித்துக் கொள்ளும் வரையில் நான் அந்தக் கூட்டணியில் தொடருவேன்.
அமைச்சர் மீதான வழக்குகள் குறித்து கேட்கிறீர்கள்.. அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்தால் அதை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களுடைய பொறுப்பு .. கடமை" என்றார். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, " கூட்டணிக்கு பெயர் இந்தியன் (இந்தியா) என்று வைத்து இருக்கிறார்கள். அது நல்ல தலைப்புதான். உள்ளபடியே அதை வரவேற்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications