விஜயுடன் கூட்டணி வைப்பது சரிவராது.. பெரிய கட்சிகள் அழைத்தபோதே செல்லாதவன்.. சீமான் ஓபன் டாக்!
மதுரை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது சரியாக வராது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே செல்லவில்லை என்று கூறிய அவர், இந்தி இந்திய மொழியே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், யார் இந்தியை திணித்தார்களோ அவர்களுடன் தேர்தல் வெற்றிக்காக கூட்டணி அமைத்தது யார்?

திராவிட ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் இந்திகாரர்கள் உடையாது. இந்தியாவின் தனிச்சிறப்பே பல்வேறு மொழி பேசக் கூடிய இனங்கள் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதுதான். அதனை சிதைக்கதான் பாஜக முயற்சிக்கிறது. நாட்டை துண்டாட நினைக்கிறார்கள்.
இந்தியை கட்டாயம் படிக்க வேண்டுமென்றால், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இந்தியாவில் இத்தனை மொழிகாள் இருக்கும் போது, ஏன் இந்தியை மட்டும் படிக்க வேண்டும்? ஆங்கிலம் பயிற்று மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதே பிரச்சனையாக மாறிவிட்டது. இந்தி மொழி இந்திய மொழியே கிடையாது. தொடர்புக்கு ஒரு மொழி அவசியம். அதற்கு ஏற்கனவே ஆங்கிலம் உள்ளது.
இந்தி பேசும் மாநிலங்கள் வளர்ந்துவிட்டதா? வளர்ந்துவிட்டால் ஒன்றரை கோடி மக்கள் எதற்கு தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்? மருத்துவம், கல்வியில் இந்தி பேசும் மாநிலங்கள் பின் தங்கி இருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்த கேள்விக்கு, கட்சிக்காக நான்.. கட்சியில் நான் என்ற கோட்பாட்டுடன் இருப்பவர்களே நாதகவில் பயணிக்க முடியும்.
வளர்ச்சிக்காக வேறொரு நபர்கள் வரும் போது, சிக்கல் வருகிறது. சீமானுக்கு பின் கட்சி யாருக்கு என்பதே அவர்களின் போட்டி. கட்சியில் என்னை வளரவிடவில்லை என்கிறார்கள். கட்சி வளர்ந்தால் மட்டுமே அவர்கள் வளர முடியும். எனது இடத்தில் இருந்து படையை வழி நடத்தினால் மட்டுமே சிக்கல்கள் தெரியும். சர்வாதிகாரியாக இல்லையென்றால் கட்சியை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி டிஐஜி வருண்குமார் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ஐபிஎஸ் வருண்குமார் கட்சிக்காரன் போல பேசுகிறார். அவர் தமிழ்நாட்டில் தனி அரசாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார். என்னை தேவையில்லாமல் சீண்டினால் வெறி வரும். அவரின் வேலையே செல்ஃபோனை திருடுவது தான். கட்சிக்காரரை போல் செயல்படும் வருண்குமார் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய் பற்றிய கேள்விக்கு, ஆட்சி அதிகாரத்தில் பெரிய தலைவர்கள் இருந்த போதே நான் கூட்டணிக்கு செல்லவில்லை. அதனால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது சரியாக வராது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications