சர்வாதிகாரமாக அட்வைஸ் செய்தால் எப்போதும் ஏற்கவே மாட்டோம்.. அமைச்சர் பிடிஆர் பரபர பேச்சு
மதுரை: சர்வாதிகாரத்தனமாக நாங்கள் சொல்வதையே பின்பற்ற வேண்டும் என அறிவுரை செய்தால் தமிழக அரசு ஒருபோதும் அதனை பின்பற்றாது என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கை உள்ளிட்ட நாடுகள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தத்தளித்து வருகின்றன. இந்த பொருளாதார பேரழிவு தொடர்பாக நமது நாட்டில் நடைபெறும் விவாதங்களில் இலவசங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன.
பிரதமர் மோடி அண்மையில் இலவசங்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்திருந்தார். அதேபோல் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் இலவசங்களுக்கு எதிராகவும் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், இலவசங்கள்- மக்கள் நலத் திட்டங்களை ஒப்பீடு செய்து கருத்து தெரிவித்துள்ளது. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு தடை விதிக்கவும் முடியாது; இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதிகள் தரவே கூடாது என கட்சிகளுக்கு உத்தரவிடவும் முடியாது எனவும் கூறியுள்ளது.
இதனடிப்படையில் டிவி விவாதம் ஒன்றில் பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இலவசங்களை நியாயப்படுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தார். அவரது வாதம் இப்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் இது உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: ஒரு அரசுக்கு மனிதநேயம், செயல் திறன் மிகவும் முக்கியம். கலாசாரம், மொழி, கொள்கை, தத்துவம் போல மனித நேயம், செயல்திறன் அரசியல்வாதிக்கும் முக்கியம்.
நாட்டில் இப்போது இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இலவசங்கள் மக்களுக்கு பயனளிக்கின்றனவா? என விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவாதங்களை விட அரசாங்கம் செயல்படுத்துகிற திட்டம் மக்களுக்கு எப்படி சென்று சேர்ந்துள்ளது என்பதுதான் மிக முக்கியம்.
தமிழ்நாடு அரசானது இந்திய வரலாற்றிலேயே அனைத்து துறைகளிலும் சிறந்த மேலாண்மை, ஆலோசகர்கள் அறிவுரைகளின் படி செயல்பட்டு வருகிறது. தற்போது சில தனிநபர்கள் அரசியல் அடிப்படையில் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்குகின்றனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர், பிரதமருக்கு தலைமை ஆலோசகர்களாக இருந்தவர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளை கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நல்ல கருத்துகளை யார் சொன்னாலும் கேட்கலாம். ஆனால் சர்வாதிகரத்தனமாக நாங்கள் சொல்வதை பின்பற்றுங்கள் என சொன்னால் அந்த அறிவுரைகளை பின்பற்ற மாட்டோம். இவ்வாறு பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
தக் லைப் தலைவா.. பிரித்து மேய்ந்த பிடிஆர்! டிவி நேரலை என்று பாராமல் சம்பவம் - அணிவகுக்கும் மீம்ஸ்கள்