"அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடுனு எல்லாம் சொல்லுவாங்க.. நம்பிடாதீங்க.." மாணவிகளுக்கு கனிமொழி அட்வைஸ்
பெண்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தைத் திராவிட இயக்க தலைவர்கள் அளித்ததாகக் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரையில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி பெண்கள் இன்னும் பல உரிமைகளுக்குப் போராட வேண்டி உள்ளது என்றும் பெண்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மகளிர் உரிமை, மாற்றுத்திறனாளிகள் விவகாரம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் திமுக எம்பி கனிமொழி.. மகளிர் உரிமை குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களில் ஒருவராகக் கனிமொழி இருக்கிறார்.
இதனிடையே சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழி, இன்னுமே பெண்கள் உரிமைக்காகப் போராட வேண்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
கனிமொழி
மதுரையில் உள்ள இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி, தூத்துக்குடி எம்பி கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பி கனிமொழி பட்டம் வென்ற மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு மாணவிகள் மத்தியில் உரையாற்றிய அவர் பெண்களுக்கான முக்கியத்துவம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சமூகத்தில் இருந்த எதிர்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், "கல்லூரி என்பது பெரிய கனவுகளைச் சுமந்துள்ள கல்விச்சாலை. பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களைப் படிக்க வைத்துள்ளனர் என்பதை நீங்கள் உணரும் நாள் தான் இந்த பட்டம் பெறும் நாள்.. இங்குப் பட்டம் வாங்க நீங்கள் எத்தனை போராட்டங்களைச் சந்திக்க வேண்டி உள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள். பெண்கள் கல்வி கற்கக் கூடாது, வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று இந்த சமூகத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தது.
இன்னும் உரிமை கிடைக்கவில்லை
இதையெல்லாம் தாண்ட.. தேவையான எதைப் பெறவும் பெண்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இப்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. இருப்பினும் இன்னுமே கூட பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை முழுமையாகப் பெறவில்லை.. மற்றவர்களைச் சார்ந்தே வாழும் சூழல் தான் இப்போதும் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். இதற்கான கடமையும் பொறுப்பும் நம் அனைவரிடமும் உள்ளது.
தலைவர்கள்
நீங்கள் பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் பெண்ணுரிமை பேசும் அனைவரும் ஒரு வரையறை வைத்திருப்பார்கள். சில கருத்தியலை வைத்திருப்பார்கள். அது அனைத்தையும் தகர்த்தெறிந்தவர் தலைவர் பெரியார். அவரது வழியில் கருணாநிதி பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதற்காகப் பெண்களுக்காக 30% இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.. அதேபோல அவரது வழிவந்த முதல்வர் ஸ்டாலினும் பெண்கள் இட ஒதுக்கீட்டை 40% அதிகரித்து பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவித்தார்.
கல்வி முக்கியம்
பெண் கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.. பெண்களுக்கான இடமும் விரிவடைய வேண்டும். அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடு உள்ளிட்டவற்றைச் சொல்லி நமது உரிமைகளைப் பிடுங்கப் பார்க்கிறார்கள். அவர்களை நாம் எச்சரிக்கையாக அணுக வேண்டும்.. உங்கள் வயதில் நாங்கள் இருக்கும் போது பல தவறுகளைக் கடந்து வந்துள்ளோம். இந்த தவறுகளை நீங்களும் செய்யக் கூடாது என்பதற்காகவே உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் பின்னால் வரும் பெண்களின் எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது. நமது நிலையைப் புரிந்து செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.