"மதுரைக்கு மெட்ரோ ரயில் எப்போது வரும்?" ஏங்கும் மதுரைவாசிகள்! மெட்ரோ நிர்வாகம் கொடுத்த சூப்பர் பதில்
மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மதுரை மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ள நிலையில், இது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாகச் சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் இப்போது இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொட்டு உள்ளது.

சென்னை
சென்னையில் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை ஒரு வழித்தடம், சென்டரல் முதல் பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடம் என மொத்தம் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளும் ஒரு புறம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை
இதனிடையே சென்னையைப் போலவே மற்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை அமைக்கச் சாத்தியக்கூறு உள்ளதாக என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்து இருந்தார்.

எப்போது
இதையடுத்து மதுரைக்கு எப்போது மெட்ரோ வரும் என்றும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் மதுரை மெட்ரோ சாத்தியக் கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் என்ற நிறுவனத்திற்கு காண்டிரக்ட் அளிக்கப்பட்டது. கடந்த மே மாதம் இந்த அறிக்கையைச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் (சிஎம்ஆர்எல்) இவர்கள் தாக்கல் செய்தனர்.

பதில்
மதுரைவாசிகளுக்கு மெட்ரோ எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். மதுரையில் மெட்ரோ எப்போது வரும் என்பது குறித்து சிஎம்ஆர்எல் அளித்த பதிலில், "மதுரை மெட்ரோ தொடர்பாக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை சமீபத்தில் தான் சமர்ப்பிக்கப்பட்டது. அதை இப்போது பரிசீலனை செய்து வருகிறோம்.

மிக விரைவில்
பரிசீலனை செய்யும் பணிகள் முடிந்த பிறகு, இது தொடர்பாக இறுதி மிக விரைவில் அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்படும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. பரிசீலனை பணிகள் முடிந்த தமிழக அரசுக்கு இறுதி அறிக்கையை அனுப்பும் நிலையில், விரைவில் தமிழக அரசு மதுரையில் மெட்ரோ அமைக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதைச் சட்டசபையிலேயே அறிவிப்பாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications