முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம்! சுவாரஸ்ய ஃப்ளாஷ்பேக்!
மதுரை: முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஜெயலலிதா தங்கக்கவசம் வழங்கியது ஏன் என்பது பற்றியும் அதன் பின்னணி குறித்தும் இங்கே பார்க்கலாம்.
பசும்பொன் சென்ற ஜெயலலிதா: கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக செல்கிறார் ஜெயலலிதா. அங்கிருந்த கோவை காமாட்சிபுரி ஆதினம், முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நீங்கள் தான் தங்கக்கவசம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். இதனை அங்கிருந்த கட்சிக்காரர்களும், முக்குலத்தோர் சமுதாய மக்களும் ஆர்ப்பரிக்க வழிமொழிந்து நீங்கதாம்மா தேவர் சிலைக்கு தங்கக்கவசம் வழங்கணும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜெயலலிதா அளித்த உறுதி: புன்னகையுடன் அக்கோரிக்கையை அந்த இடத்திலேயே ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, தாம் அளித்த வாக்குறுதியை கடந்த 2014அம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நிறைவேற்றினார். அதிமுக நிதியிலிருந்து சுமார் 13 கிலோ எடைகொண்ட தங்கக்கவசத்தை நான்கரை கோடி ரூபாய் செலவில் செய்து அதனை முறைப்படி முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவித்தார். முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக்கவசம் வழங்கும் நிகழ்வானது 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது.
கோவை காமாட்சிபுரி ஆதினம்: இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்ற ஜெயலலிதாவுக்கு அதிமுகவினரும், முக்குலத்தோர் சமுதாய அமைப்பினரும் மிகப் பெரியளவில் வரவேற்பு அளித்தனர். தங்ககவசத்துக்கு தனது கையாலேயே புனித நீர் தெளித்த ஜெயலலிதா, யார் தன்னிடம் கோரிக்கை விடுத்தாரோ அதே நபரிடம் (கோவை காமாட்சிபுரி ஆதினம் ) முறைப்படி ஒப்படைத்தார்.
மதுரை பாங்க் ஆஃப் இந்தியா: இதனிடையே குரு பூஜையின் போது மட்டும் தங்கக்கவசத்தை முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கும் வகையிலும் மற்ற நாட்களில் மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி லாக்கரில் தங்கக் கவசம் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் அதிமுக சார்பில் தனிக்கணக்கு தொடங்கப்பட்டது. அதிமுக பொருளாளரும், தேவர் நினைவிட பொறுப்பாளர்களும் இணைந்து வங்கியில் இருந்து தங்கக்கவசத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் வழி வகை செய்யப்பட்டன.
திண்டுக்கல் சீனிவாசன்: அந்த வகையில் இந்தாண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால், தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அதிகாரிகள் முறைப்படி இன்று ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications