மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? ரேஸில் முந்தும் டாக்டர் சரவணன்! எடப்பாடி சாய்ஸ்?
மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்க பலரும் முட்டி மோதி வரும் நிலையில் டாக்டர் சரவணன் ரேஸில் முந்துகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக களமிறக்குவது என்பதில் அவர் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளார். கடந்த முறை மதுரையில் போட்டியிட்ட ராஜ் சத்யன் இந்த முறை விருதுநகரில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவர் விரும்பும் விருதுநகர் தொகுதியையே அவருக்கு அதிமுக தலைமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளராக களமிறங்க முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இவரது ஆர்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் அணை போடாமல் நம்பிக்கை அளித்து வருகிறார். சரவணனை பொறுத்தவரை தாம் சார்ந்த அகமுடையார் சமுதாயக வாக்குகள் தன்னை கரைசேர்க்கும் என எண்ணுகிறார். அதுமட்டுமல்ல மதுரை மாவட்ட மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் பரிச்சயமும் தன்னை வெல்ல வைக்கும் என நம்புகிறார்.
இதற்கு மத்தியில் சரவணனை ஓரங்கட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கு நெருக்கமான ஒவரை வேட்பாளராக களம் இறக்க காய் நகர்த்துகிறார். இதனிடையே வேட்பாளரின் செல்வாக்கு, சமுதாய பலம், பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களை ஆராய்ந்து அதற்கேற்ப வேட்பாளரை ஃபைனல் செய்யும் திட்டத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மதுரை மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா என 3 கோஷ்டிகள் உள்ளன. வெளியே பார்ப்பதற்கு மூவரும் சிரித்து சிரித்துப் பேசி ஒற்றுமையாக இருப்பது போல் தெரிந்தாலும் தேர்தல் என வரும் போது உள்ளடி வேலைகள் செய்வார்களோ என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது. இதனால் மற்ற தொகுதிகளை காட்டிலும் மதுரைக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications