அமித் ஷாவிடம் செல்லூர் ராஜு என்ன பேசியிருப்பார்? #curiosity
Recommended Video
மதுரை: மதுரை விமான நிலையத்தில் 2 முறை நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். கூடவே செல்லூர் ராஜுவையும் அவர் சந்தித்துப் பேசியதுதான் ஹைலைட்.
தமிழக மக்களால் அன்புடன் சயிண்டிஸ்ட் என்று செல்லமாக அழைக்கப்படுவர் செல்லூர் ராஜு. செல்லம் ராஜு என்பதும் இவருக்கு இன்னொரு அடையாளம். அந்த அளவுக்கு தனது செயல்பாடுகளால் மக்கள் மனதில் அப்பிக் கொண்டவர்.
இந்த நிலையில் பாஜகவின் பிக் பாஸ் அமித் ஷாவுடன் நேற்று செல்லூர் ராஜுவும் கலந்துரையாடியது கலகலப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் மதுரை அடுத்த எலியார்பத்தியில் உள்ள தனியார் கல்லூரி கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.
அமித்ஷா ஆலோசனை
இந்த சந்திப்பில் மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், திருச்சி, பெரம்பலூர், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட 18 நாடாளுமன்ற தொகுதிகளின் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், அமைப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் களப்பணிகள், வியூகங்கள், அரசின் நலத்திட்டங்களை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது என்பது குறித்து பல ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அமித்ஷா ஆலோசனை வழங்கினார்.
ஹெலிகாப்டர் அமித்ஷா
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்காக அமித்ஷா மதுரை விமான நிலையம் வந்தார்.
செல்லூர் ராஜுவும்
அப்போது சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்து அடைந்த தமிழக துணை முதல்வரும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவையும் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.
என்ன பேசினார்
ஓபிஎஸ்ஸுடன் அமித் ஷா என்ன பேசினார் என்பது குறித்து வைரலாக செய்திகள் பரவி வருகின்றன. அதேசமயம், செல்லூர் ராஜுவுடன் அமித் ஷா என்ன பேசியிருப்பார். செல்லூர் ராஜு என்ன பேசியிருப்பார் என்பது ஆர்வத்தை தூண்டி விடுவதாக அமைந்துள்ளது.