நாளை மதுரை வரும் அமித் ஷா.. அன்புமணியுடன் சந்திப்பு நடக்குமா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!
மதுரை: மதுரை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாமக தலைவர் அன்புமணியை சந்திப்பாரா என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். பாமக நிச்சயமாக என்டிஏ கூட்டணிக்கு வரும் என்று நம்புவதாக கூறிய நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று கோரி இருக்கிறார்.
மதுரையில் அமித் ஷா
சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்காக ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் வரவுள்ளார். கடந்த முறை வந்த போது அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதனால் இம்முறை தென் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்காக அமித் ஷா திட்டமிட்டிருக்கிறார். அமித் ஷா வருகையையொட்டி மதுரை ஒத்தக்கடை பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.

ஓபிஎஸ் உடன் சந்திப்பு?
அதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை வரும் அமித் ஷா, தென் மாவட்டங்களில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்வார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக - பாஜக கூட்டணி
இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதனால் அமித் ஷா வரும் போது அன்புமணி ராமதாஸ் உடன் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால் இம்முறையும் அந்த கூட்டணியை தக்க பாஜக விரும்புவதாக தெரிகிறது.
நயினார் நாகேந்திரன் அப்டேட்
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாளை இரவு மதுரை வரும் அமித் ஷா, நாளை மறுநாள் மாநில நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். இதுவரை அன்புமணி ராமதாஸை சந்திப்பது தொடர்பாக எந்த தகவலும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை.
அன்புமணியை சந்திப்பாரா?
சமரசம் என்ற வார்த்தையில் பாஜகவுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் ராமதாஸ் - அன்புமணி இடையிலான சமாதான பேச்சுவார்த்தைக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆடிட்டர் குருமூர்த்தி நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டு வருகிறார். மக்களின் நலன் விரும்பி. அதனால் சில செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஓபிஎஸ் கூட்டணி
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிரான அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டம் முழுக்க முழுக்க பாஜக நிர்வாகிகளுக்காக நடத்தப்படுவது. மதுரை வரும் அமித் ஷா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்திப்பாரா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறார்.. பாமக நிச்சயம் எங்களுடன் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications