சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு தரமில்லாத அரிசியை கொட்டி ஆரத்தி எடுத்த பெண்கள்
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளரான எம்.எல்.ஏ., மாணிக்கத்திற்கு தரமற்ற அரிசியால் ஆரத்தி எடுத்து பெண்கள் ஷாக் கொடுத்தனர்.
தரமற்ற அரசியை வைத்து சூடம் ஏற்றி ஓட்டு சேகரிக்க வந்த , மாணிக்கம் எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதை சற்றும் எதிர்பார்க்காத எம்எல்ஏ அதிர்ந்து போனார்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளராக மாணிக்கம் எம்.எல்.ஏ மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் எப்படியும் வென்றுவிடலாம் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

பிரச்சாரம்
மாணிக்கம் எம்.எல்.ஏ அலங்காநல்லுார் ஒன்றியம் குமாரம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது குமாரம், மணியஞ்சி, தண்டனை உள்ளிட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி பெண்கள் வழி நெடுகிலும் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சூடம் ஏற்றினர்
குமாரம் பகுதியில் மாணிக்கம் எம்.எல்.ஏ வாக்குச் சேகரிக்கச் சென்றார். அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மோசமாக உள்ளதைச் சுட்டிக் காட்டும் வகையில் தட்டில் ரேஷன் அரிசியை பரப்பி எம்எல்ஏவுக்கு சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நடவடிக்கை எடுப்பேன்
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று உள்ளதாகவும், இனியாவது தரமான அரிசியை வழங்குமாறும் அவரிடம் சில பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் சிரித்துக்கொண்டே 'தரமற்ற அரிசி குறித்து என் கவனத்திற்கு வரவில்லை.உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என சமரசம் செய்தபடி சிரித்துக்கொண்டே அங்கிருந்துபுறப்பட்டு சென்றார்.

ஷாக் தந்த எம்எல்ஏ
பின்னர் மாணிக்கம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். யாரும் எதிர்பார்க்காத விதமாக ரவீந்திரநாத்குமாரின் காலில் விழுந்து மாணிக்கம் எம்எல்ஏ ஆசிர்வாதம் பெற்றார். இந்த காட்சி அங்குள்ளவர்களை அதிர்ச்சி அடையவைத்தது. உடனடியாக ரவீந்திரநாத் அவரை தூக்கி வேண்டாம் என்று தடுத்தார்.












Click it and Unblock the Notifications