தனது காளையை பிடித்த இளைஞர்களை.. மூக்கணாங்கயிற்றால் தாக்கிய ஓனர்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரபர
மதுரை: பொங்கல் பண்டிகையான இன்று, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை, காளையின் உரிமையாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று போட்டி நடைபெற்று வருகிறது. அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கி தற்போது வரை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்கி மதியம் 12 மணிவரை 4 சுற்றுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க காசு, அண்டா, குக்கர், கட்டில், பீரோ, பைக், கார் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு கார்த்தி என்பவர் போட்டியில் முதலிடம் பிடித்திருந்தார். இந்த ஆண்டும் அவர் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் 7 காளைகளை அடக்கிய திவாகரும், 3வது இடத்தில் 3 காளைகளை அடக்கிய ராகாவா என்பவரும் இருக்கின்றனர். இந்த போட்டியில் மதியம் 12 மணி நிலவரப்படி, ஒரு பார்வையாளர் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், இந்த போட்டியில் தனது காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை, மாட்டின் உரிமையாளர் மூக்கணாங்கயிறு கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மாடு வாடிவாசலை தாண்டி சீறி பாய்ந்து வந்தது. மாட்டை பிடிக்க 3-4 பேர் வரை போட்டு போட்டு தாவினர். ஆனால் மாடு 2 பேருக்கு மட்டுமே பிடி கொடுத்தது. இரண்டு பேர் சேர்ந்து மாட்டை பிடித்தால் அது செல்லுபடி ஆகாது. எனவே, மாட்டின் உரிமையாளருக்கு பரிசு சென்றுவிடும். இதே போன்ற சம்பவம் நடந்தபோது மாட்டின் உரிமையாளர்கள் 2 பேர், மாடுபிடி வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
போட்டியை நடத்திக்கொண்டிருந்த விழா கமிட்டியினர் இந்த சம்பவத்தை பார்த்து அதிருப்தி தெரிவித்தனர். "மாட்டை ரெண்டு பேரு புடிச்சா பரிசு கெடையாதுனு தெரியும். மாட்டுகாரங்களுக்குதான் அந்த பரிசு போகும்னு தெரியும். அப்படி இருந்தும் ஏம்பா மாடுபிடி வீரரை தாக்குறீங்க?" என்று விழா கமிட்டியினர் கேள்வி எழுப்பினர்.
இறுதியாக மாட்டை ஒருவர் மட்டுமே பிடித்துக்கொண்டிருந்தார். இறுதியில் அவரும் தனது பிடியை விலக்கிய நிலையில், அவர் மீதும் மாட்டின் ஓனர் பாய்ந்து அடித்திருக்கிறார். பதிலுக்கு மாடுபிடி வீரரும் அடிக்க பாய்ந்திருக்கிறார். இதனால் அதிருப்பதியடைந்த விழா குழுவினர் 254 எண் கொண்ட மாடுபிடி வீரரை ஜல்லிக்கட்டு போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications