மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சோகம்! மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்று வருகிறது. ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் காளைகளை அடக்க களமிறக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயங்களுடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார்.
வாடிவாசல் அருகே காளை வெளியேறுவதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாலமுருகனை, அவரது இடது மார்பில் காளையின் கொம்பு குத்தி சீவியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என காலை தொடங்கி தற்போது வரை 75-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியும், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரும் அவனியாபுரத்தை விட்டு நகரவே இல்லை.
ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர்களில் சிலர் ஆர்வமிகுதியில் காளை சீறிப்பாயும் இடத்திற்குள் சென்றதால் இது போன்ற விபரீதங்கள் ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே முதல் நாள் ஜல்லிக்கட்டிலேயே பரிதாபமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது.
400 காளைகளை வரை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அவிழ்த்துவிடப்பட்டது. 401-வது காளையை அவிழ்த்துவிடப்பட்ட போது தான் இந்த துரதிர்ஷடவசமான நிகழ்வு நடந்துள்ளது. இதனிடையே பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் இது போன்ற கவனக்குறைபாட்டால் உயிரிழப்புகள் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உ.பி: அகிலேஷுடன் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் சந்திப்பு- பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா