612 கோடிப்பே.. யார் அந்த 2கே கிட்ஸ்.. மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் நடக்கும் கூத்தை பாருங்க
மதுரை: ரூ.612 கோடி செலவில் கட்டப்பட்ட மதுரை நத்தம் சாலை பறக்கும் பாலம் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான பாலமாகும்.. இது நாள்தோறும் இன்ஸ்டா அலப்பறைகளின் 'ஸ்பாட்டாக’ மாறிவருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பாலத்தைப் பயன்படுத்த பொதுமக்கள் அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பாலம் என்ற அடையாளத்துடன் மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை ரூ.1,744 கோடியில் போடப்பட்டிருக்கிறது. . மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் தல்லாக்குளத்தில் இருந்து, ஊமச்சி குளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை பறக்கும் மேம்பாலம் போடப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக நத்தம் நான்கு வழிச்சாலையில் அப்படியே பயணிக்கலாம். அதன் மூலம் துவரங்குறிச்சி திருச்சி வழியாக சென்னை செல்ல முடியும். திண்டுக்கல்லுக்கு வாடிப்பட்டி, கொடைரோடு வழியாக போகாமல் நத்தம் வழியாகவும் போக முடியும்.

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையை பொறுத்தவரை துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் வரை 25.5 கி.மீ தூரத்திற்கும், நத்தத்தில் இருந்து மதுரை வரை 35.5 கி.மீ தூரத்திற்கும் நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மதுரையில் மேம்பாலத்துடன் செல்லும் இந்த சாலையில் சென்றால் திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்ல பயண நேரம் வழக்கத்தைவிட குறைவான நேரமே ஆகும். அதேநேரம் இந்த சாலை சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலையுடனே சாலையை கடந்து செல்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமான மதுரை- நத்தம் சாலை மேம்பாலத்திற்கு மிக வலுவான அஸ்திவாரத்துடன் கூடிய 268 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது 150 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேம்பால தூண்களுக்கு இடையே பாலத்தை இணைக்கும் வகையில் 'கான்கிரீட் கர்டர்கள்', கிடைமட்ட வாக்கில் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த மேம்பாலத்திற்கு கீழ் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மதுரை நத்தம் பறக்கும் பாலம், மதுரையின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை இளைஞர்கள் பீர்பாட்டிலுடன் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிடும் இடமாக மாற்றியிருக்கிறார்கள். இரவு நேரங்களில் சாகசம் செய்யும் இடமாகவும், மதுபோதையில் சூட்டிங் நடத்தும் இடமாகவும் மேம்பாலம் மாறியிருக்கிறது. ரூ.612 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பறக்கும் பாலத்தின் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி நின்றபடி அலப்பறை செய்வது அதிகரித்துள்ளது. மேலும் பறக்கும் பால சாலையில் பைக்ரேஸில் ஸ்டண்ட் செய்வது. காரில் ரேஸ் செல்வது போன்ற சேட்டைகளை சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்..
போலீஸ் ரோந்துக்கு எப்போது வருகிறார்கள், போகிறார்கள் என்பதை கண்டுபிடித்துள்ள இளைஞர்கள், போலீஸ் இல்லாத நேரமாக பார்த்து வந்து, மது போதையில் அலப்பறை செய்கிறார்கள். இதனால் இரவில் வாகன ஓட்டிகள் பாலத்தில் அச்சத்துடன் செல்லும் நிலை இருக்கிறது. பயணிப்பதற்காக போடப்பட்ட பாலத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாகவும், மது அருந்திவிட்டு ஆட்டம் போடும் இடமாகவும் மாற்றியுள்ள இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இதனிடையே கையில் பீர் பாட்டிலுடன் மேம்பாலத்தின் சென்டர்மீடியனில் ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications