கர்நாடகா: கேஆர்எஸ் அணை நீர்மட்டம் 101.08 அடி- நம்பித்தான் ஆகணுமாம் 132 ஆண்டுகளில் இல்லாத வறட்சியாம்!
மண்டியா: கர்நாடகாவில் வரலாறு காணாத வறட்சி.. 132 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக அத்தனை தாலுகாக்களிலும் வறட்சி என 'ஒப்பாரி' வைக்கிறது. அதே கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடக் கூடிய கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 101.08 அடி. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கூடாது என கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை சொற்ப அளவு கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்த சொற்ப நீரையும் தமிழ்நாட்டுக்கு திறக்கவே கூடாது என்பதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக மண்டியா விவசாயிகள் இதே போராட்ட வேலையாகவே இருக்கின்றனர். நாள்தோறும் மண்டியாவில் ஏதேனும் ஒரு போராட்டத்தை கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் நடத்திக் கொண்டே இருக்கின்றன்ர். இன்று 35-வது நாளாக இந்தப் போராட்டங்கள் நீடிக்கின்றன.

அத்துடன் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது என கூப்பாடு போட்ட ஆளும் காங்கிரஸ் அரசின் கூக்குரலுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசும் செவிகொடுத்து கேட்டு மத்திய குழுக்களை உடனே அனுப்பி வைத்திருக்கிறது. கர்நாடகாவின் வறட்சி பாதித்ததாக சொல்லப்படும் பகுதிகளை மத்திய பாஜக அரசின் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.

இதனிடையே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடிய கிருஷ்ணராஜ சாகர் - கேஆர்எஸ் அணையில் தற்போது நீர்மட்டம் 101.08 அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. குடகு மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதுதான் காவிரி நீர் பிடிப்பு பகுதி. ஆகையால் சில நாட்களுக்கு முன்னர் கேஆர்எஸ் அணைக்கு வினாடிக்கு 11,800 கன அடி நீர் வந்தது. தற்போது 4,046 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1,490 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கூடிய கபினி அணைக்கு வினாடிக்கு 1,972 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 65 அடி. தற்போது கபினி அணையில் நீர்மட்ட அளவு 57.42. ஆனாலும் கர்நாடகாவில் பஞ்சமாம்! வறட்சி குழு வருகிறதாம்! தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரமாட்டோம் என போராட்டமாம் -நம்பித்தான் ஆகணுமாம்!












Click it and Unblock the Notifications