"கடுகு" சைஸ் சின்ன கேப்சூல் மாயம்.. உச்சக்கட்ட அலர்ட்டில் போலீஸ்.. அலறும் ஆஸ்திரேலியா! என்ன நடந்தது
சின்ன ஒரு பொருள் மாயமானதற்கு மேற்கு ஆஸ்திரேலியாவில் அலர்ட் மோடில் போலீசார் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்: மிகச் சிறிய ஒரு கேப்சூல் மாயமான நிலையில், ஒட்டுமொத்த மேற்கு ஆஸ்திரேலியாவிலும் அலர்ட் நிலையில் உள்ளது. அப்படி அது என்ன பொருள், ஆஸ்திரேலிய அதிகாரிகள் அலற என்ன காரணம் என பார்க்கலாம்.
கதிர்வீச்சு காரணமாக கேன்சர் உட்பட பல மோசமான நோய்ப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உலகின் அனைத்து நாடுகளுமே கதிர்வீச்சு நிறைந்த பொருட்களை மிகுந்த எச்சரிக்கையுடன் தான் கையாள்கிறது.
கதிர்வீச்சை வெளியிடும் பொருட்களால் தெரியாமல் யாராவது தொட்டாலும் கூட கதிர்வீச்சின் அளவை பொறுத்து அவர்களுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் அதிகமாகவே உள்ளது. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பல நாடுகளும் கூட இங்கு உள்ளன.

ஆஸ்திரேலியா
இதனிடையே ஆஸ்திரேலியா நாட்டில் ரேடியோ ஆக்டிவ் பொருள் ஒன்று திடீரென மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த மேற்கு ஆஸ்திரேலியாவும் அலர்ட் மோடில் உள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் போது இந்த ரேடியோ ஆக்டிவ் பொருள் மாயமாகியுள்ளது. மாயமாகியுள்ள இந்த ரேடியோ ஆக்டிவ் பொருளால் கதிர்வீச்சு காயங்கள் முதல் பெரிய நோய் கூட ஏற்படுமாம்.

கடுகு சைஸ்
இதன் காரணமாகவே அங்கு ஆஸ்திரேலியாவில் உச்சபட்ச அலர்ட் நிலை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவும் அலறும் இந்த பொருள் என்ன சைஸ் இருக்கும் ன நினைக்கிறீர்கள்.. குறைந்தபட்சம் ஒரு பெரிய பாக்ஸ் அளவுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் மாயமான அந்த கேப்சூல் அளவு ரொம்பவே சிறியது. உங்கள் கட்டை விரலை விட சிறியது. 8 மிமீ நீளமும் 6 மிமீ அகலம் கொண்ட இந்த சிறிய கேப்சூல் மாயமானதற்குத் தான் இவ்வளவு பெரிய அலர்ட் நிலை விடுக்கப்பட்டுள்ளது.

என்ன பொருள்
இந்த கதிரியக்க கேப்சூலை சுரங்கத்தில் இருந்து எடுத்துச் சென்ற போது, அது டிரக்கின் பின்புறத்தில் இருந்து எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்துள்ளது. அங்குள்ள கிம்பர்லி பிராந்தியத்தில் உள்ள சிறிய நகரமான நியூமனின் வடக்கில் இருந்து பெர்த்தின் வடகிழக்கு புறநகர்ப் பகுதிக்குக் கொண்டு செல்லும்போது ரேடியோ ஆக்டிவ் சீசியம்-137 வெள்ளி கேப்சூல் தொலைந்து போனதாக ஆஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்க பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இதனால் கதிர்வீச்சு தீக்காயங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதாலேயே ஹை அலர்ட் மோட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எப்படி மாயமானது
சுரங்கத்திலிருந்து பெர்த் சேமிப்புக் கிடங்குக்கு லாரி மூலம் பல பொருட்களுடன் இதையும் சேர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது சாலையில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அதிர்வால் லாரியின் கதவு சற்றே திறக்க அந்த கேப்சூல் கீழே விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெர்த்தின் வடகிழக்கில் சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அலர்ட் நிலை
கடந்த ஜனவரி 12ஆம் தேதி அந்த லாரி சென்றுள்ளது. இருப்பினும், இந்த வாரம் வரை கேப்சூல் காணாமல் போனதை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கேப்சூல் காணாமல் போனதை உணர்ந்த உணர்ந்த அதிகாரிகள் லாரி முழுக்க தேடியுள்ளன. இருப்பினும், அதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அலர்ட் நிலை பிரகடனம் செய்துள்ளனர். இந்த கேப்சூல் ரியோ டின்டோ சுரங்கத்திற்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து அந்த நிறுவனம் எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.

என்ன பாதிப்பு
இது குறித்து மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை சுகாதார அதிகாரி ஆண்ட்ரூ ராபர்ட்சன் கூறுகையில், "இந்த கேப்சூலை உடலுக்கு அருகில் வைத்திருந்தால், தோல் சிவத்தல் மற்றும் கதிர்வீச்சு தீக்காயங்கள் ஏற்படும். அதிக நேரம் இது நமது உடலில் வெளிப்பட்டால், இன்னுமே கூட சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.. நோயெதிர்ப்பு மண்டலத்தில் கூட இது தாக்கங்கள் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

பெரிய பிரச்சினை
இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், இதைப் பார்க்கும் பலருக்கும் இது என்னவென்றே தெரியாது. இதனால் அவர்களுக்கு மோசமான பாதிப்பு ஏற்படக் கூடும்" என்றார். இதன் காரணமாக அங்கு ஹை அலர்ட் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கேப்சூலை தேட மிகத் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் லாரி சென்ற பாதையில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் மேற்கு ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications