"என் புள்ள சாப்பிட்டானோ இல்லையோ".. கவலையில் தாய் மரணம்.. உக்ரைனில் இருந்து வீடியோ காலில் மகன் கதறல்
ஆம்பூர்: உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து அவரது தாய் உயிரை விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆம்பூரை அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல். உக்ரைன் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
இவரது பெற்றோர் சங்கர் மற்றும் சசிகலா தங்கள் கிராமத்தில் விவசாயம் வேலை செய்து வருகிறார்கள். கடந்த சில தினங்களாக உக்ரைனில் போர் நடைபெற்று வருவதை இவர்கள் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டார்கள்.

உக்ரைனில் மகன் குறித்து கவலை
இதனால் உக்ரைனில் உள்ள தனது மகன் சாப்பிடுகிறாரா, தூங்குகிறாரா, பாதுகாப்பாக இருக்கிறாரா, நல்லபடியாக திரும்பி வருவாரா உள்ளிட்ட எண்ணங்களை மனதில் போட்டு புழுங்கிக் கொண்டிருந்துள்ளார் சசிகலா. மகன் எத்தனையோ முறை வீடியோ கால் போட்டு தாய்க்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

பதுங்கு குழிகள்
இந்த மாணவர்கள் பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆங்காங்கே குண்டு சப்தம் கேட்பது குறித்தும் அறிந்த சசிகலா தனது மகனை நினைத்து துயரில் ஆழ்ந்த போது நேற்று மாலை எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வீடியோ காலில் தாயின் சடலத்தை பார்த்த மகன்
அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில் தாயின் இறுதி சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில் மூத்த மகன் சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உறவினர்கள் வேண்டுகோள்
மேலும் விரைவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சக்திவேல் மற்றும் அவருடன் இருக்கும் மாணவர்களை உடனடியாக அழைத்து வர உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சசிகலாவை போல் ஏராளமான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் நிலையை அறிந்து பெரும் துயரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications