மகாராஷ்டிரா சட்டசபையில் 10 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள்- பாஜக சுனாமியில் புதையுண்டு போன சிறு கட்சிகள்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று 10 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாகி உள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் முஸ்லிம் ஒருவர் எம்.எல்.ஏ.வாகி உள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வீசிய சுனாமி எனும் ஆழிப் பேரலையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட ஏராளமான சிறு கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டுவிட்டன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதனையடுத்து புதிய ஆட்சி அமைப்பது, முதல்வர் பதவி உள்ளிட்டவை தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்துத்துவா கோட்பாட்டை முன்னிறுத்தும் கட்சிகள் அதிகம் கோலோச்சும் மகாராஷ்டிரா சட்டசபையில் இந்த முறை 10 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாக நுழைகின்றனர். காங்கிரஸில் இருந்து மும்பாதேவி தொகுதியில் அமின் படேல், சேக் மலாடு தொகுதியில் இருந்து அஸ்லாம் சேக், அகோலா மேற்கு தொகுதியில் இருந்து சாஜித் பதான் வென்றுள்ளனர். அஜித்பவார் தேசியவாத காங்கிரஸில் இருந்து நவாப் மாலிக் மகள் சனா மாலிக் வென்றிருக்கிறார். சமாஜ்வாதி கட்சியில் இருந்து 2 முஸ்லிம்கள் வென்றுள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் வீசிய பாஜக ஆதரவு சுனாமி அலையில் ஏராளமான சிறு கட்சிகள் இருந்த இடமே தெரியாமல் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு விட்டன. ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சி கூட்டணி என ஏராளமான கட்சிகள் காணாமல் போய்விட்டன.












Click it and Unblock the Notifications