மகாராஷ்டிராவில் இடிந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. பச்சிளம் குழந்தை உட்பட 14 பேர் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 1 வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கட்டிட விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது சோகத்தை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் 4 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 50 வீடுகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து, அருகில் உள்ள காலியான குடியிருப்பின் மீது விழுந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளனர். விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
விபத்துக்குள்ளான கட்டிடம் நெரிசலான பகுதியில் அமைந்துள்ளதால் மீட்பு பணிகளுக்கு கனரக இயந்திரங்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
விபத்து நடந்த பல மணி நேரத்துக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 24 வயது இளம்பெண், அவரது ஒரு வயது பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையாக அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications