கையில் பணம் இல்லை.. இ பாஸ்க்கு விண்ணப்பித்தும் பதில் இல்லை.. அவுரங்காபாத் தொழிலாளி கண்ணீர் பேட்டி
மும்பை: அவுரங்காபாத் ரயில் விபத்தில் சிக்கிய உயிரிழந்த தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இ- பாஸ்களுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் தங்கள் சொந்த மாநிலத்தை நோக்கி நடக்க முடிவு செய்ததாகவும் விபத்தில் தப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி வேதனை தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த கூலி தொழிலாளர்கள், மகாராஷ்டிராவின் ஜல்னாவிலிருந்து அவுரங்காபாத் வரை 45 கி.மீ தூரம் நடந்து சென்றனர். அத்துடன் ஒரு ரயிலைப் பிடித்து சொந்த ஊருக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் கால்நடையாக மற்றொரு 120 கி.மீ தூரமுள்ள பூசாவலை நோக்கிச் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஆனால் இரவு நேரம் ஆனதால் அனைவரும் தண்டாவளத்தில் ஓய்வெடுத்தப்படி அப்படியே உறங்கிவிட்டனர். இன்று அதிகாலை 5.15 மணிக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது. அதில் 16 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் அவர்களுடன் வந்த 3பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

இ பாஸ்க்கு விணணப்பம்
உயிர் தப்பிய மூன்று பேரில் ஒருவரான திரேந்திர சிங் உமரியா மாவட்டத்தில் உள்ள மாமன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கால் வேலையை இழந்த நிலையில எங்கள் குடும்பம் எங்களை எதிர்நோக்கி காத்திருந்தது. எனவேதான் நாங்கள் மத்திய பிரதேசத்திற்கு இனியும் செல்வதற்காக காத்திருக்க முடியாமல் போய்விட்டது. நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு மத்திய பிரதேச அதிகாரிகளுடன் இ-பாஸ்களுக்கு விண்ணப்பித்திருந்தோம், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சரக்கு ரயில் ஏறியது
நாங்கள் எங்கள் குழுவினருடன் நடந்து கொண்டிருந்தபோது ஓய்வெடுக்க ரயில் தடங்களில் அமர்ந்து பின்னர் தூங்கினோம்.. அதிகாலை 5.15 மணியளவில் கடந்து சென்ற சரக்கு ரயில் எங்கள் குழுவீனர் மீது ஏறியது. நாங்கள் ரயில் தண்டவாளம் அருகே இருந்ததால் நாங்கள் கத்திகூச்சலிட்டு எச்சரித்தோம். ஆனால் அவர்களுக்கு கேட்கவில்லை என்றார்.

நடந்தே சென்றுள்ளனர்
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேர் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மத்திய பிரதேசததின் ஷாஹ்தோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் அண்டை மாவட்டமான உமரியாவைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் ஒரு தொழிலாளி காயமடைந்தார். அவர்கள் அனைவரும் மத்திய பிரதேசம் ஜல்னாவில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் ஊரடங்கால் சிக்கித் தவித்த நிலையில் தேவையான மின்-பாஸ்கள் கிடைக்காமல் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால பஸ்ஸுக்கு காத்திருக்காமல் நடந்தே ஊருக்கு சென்ற நிலையில் இப்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசு சிறப்பு ரயில்
இதற்கிடையே 40 நாட்கள் லாக்டவுனுக்கு பின்னர் அவசர காரணங்களுக்காக வீடு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோருக்காக "ஷ்ராமிக்" சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புக்கொண்டது, ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பலர் கால்நடையாக நடக்க தொடங்கியுள்ளனர். மத்திய பிரதேச அரசு வழங்கிய மின்-பாஸுக்கான ஆன்லைன் லிங்க் வேலை செய்யவில்லை. இதனால் தான் தொழிலாளர்கள் பாதிப்பை சந்தித்திருக்கிறர்கள் இந்நிலையில் தொழில்நுட்ப சிக்கலை விரைவில் சரிசெய்வோம் என்று மத்திய பிரதேச அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications