ஏக்நாத் ஷிண்டே ஹேப்பி.. உத்தவ் தாக்ரே ஆதரவு எம்எல்ஏக்கள் 16 பேருக்கு சஸ்பெண்ட் நோட்டீஸ்?
மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இன்று ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏ-க்களுக்கு சஸ்பெண்ட் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக திடீரென சிவசேனா எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினர். இறுதிவரை போராடிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பின்னர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்-ம் பதவியேற்றனர்.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். பின்னர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் 2 நாட்கள் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா சட்டசபை சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் அதிருப்தி சிவசேனா-பாஜக கூட்டணி சார்பாக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர், சிவசேனா கூட்டணி சார்பாக சிவசேனா எம்எல்ஏ ராஜன் சால்வி போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பாஜகவின் நர்வேகர் மொத்தம் 164 வாக்குகள் பெற்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சிவசேனாவின் ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. சபாநாயகர் தேர்தலில் வென்ற ராகுல் நர்வேகருக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நெருங்கும் க்ளைமாக்ஸ்.. பெரும்பான்மை நிரூபிக்குமா ஏக்நாத் அரசு? தொடங்கியது நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்தநிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. ஏற்கனவே சபாநாயகர் தேர்தலில் பெற்றிபெற்றதால் நம்பிக்கை வாக்கெடுப்பிலும், ஏக்நாத் ஷிண்டே அரசு எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று புதிதாக சிவசேனா சட்டமன்றக் கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டதுடன், கொறடாவாக பாரத் கோகவாலேவையும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியில் உள்ள 16 எம்எல்ஏ-களுக்கு இடைநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணியின் பாரத் கோகவாலே, கட்சியின் உத்தரவை மீறியதாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏ-க்களை இடைநீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 16 எம்எல்ஏ-க்கள் இடைநீக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.