கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்
மும்பை: மகாராஷ்டிராவின் புனே பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள டபோடி மற்றும் புகேவாடி பகுதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், புனே நகரின் காலே படல் பகுதியில் 3 பேரும், ஹடாப்சர் பகுதியில் 2 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். இதில் யோகேஷ் வான்கடே என்பவர் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

18 பேர் உயரிழப்பு - காரணம் என்ன?
மெத்தனால் அதிகம் கலந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக கைதாகியுள்ள யோகேஷ் வான்கடே மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஸ்பிரிட் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த கள்ளச்சாராயத்தை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதிகளில் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டபோடி, புகேவாடி, ஹடாப்சர் மற்றும் காலே படல் உள்ளிட்ட பகுதிகளில் பலர் இந்த சாராயத்தை அருந்தியுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த சில மணி நேரங்களில் உடல்நிலை மோசமடைந்ததாகவும் சிலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது பற்றி கூறியதாவது:- இந்த சம்பவம் குறித்து புனே காவல் ஆணையரிடம் பேசினேன். விஷத்தன்மை கொண்ட மதுபானம் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும், சிலர் கைது செய்யப்படுவார்கள். இந்த விவகாரத்தில் மொத்த நெட்வொர்க்கையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம். யாரும் தப்ப முடியாது. ஏனெனில், இது கொலை போன்றது" என்றார்.












Click it and Unblock the Notifications