அதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா? சிகிச்சை ஆரம்பம்
Recommended Video
மும்பை: சீனா நாட்டில் ஏராளமான மக்களுக்கு கொரானா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து திரும்பிய இரண்டு நபர்கள் மும்பையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பு தீவிரமாகியுள்ளதால், மும்பை மாநகராட்சி (பிஎம்சி) சின்ச்போகாலியில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை, இதற்காக, உருவாக்கியுள்ளது.

"கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது" என்று பிஎம்சியின் நிர்வாக சுகாதார அதிகாரி டாக்டர் பத்மஜா கேஸ்கர் இன்று கூறினார்.
சீனாவில் இருந்து திரும்பிய இரண்டு நபர்களிடம், மும்பை ஏர்போர்ட்டில், லேசான இருமல் மற்றும் குளிர் தொடர்பான அறிகுறிகள் இருப்பதை, குடிமை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, அவர்கள் கஸ்தூரிபா மருத்துவமனை வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
"சீனாவில் இருந்து திரும்பி வந்த யாருக்காவது கொரானா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால், எங்களுக்கு (பிஎம்சி) எச்சரிக்கை தகவல் கொடுக்குமாறு நகரத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.
கொரானா வைரஸ் மற்றும் நோயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மகாராஷ்டிரா அரசிடமிருந்து, கஸ்தூரிபா மருத்துவமனைக்கு, விரிவான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன, மேலும் அவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் என்பது வைரஸின் மோசமான குடும்பத்தை சேர்ந்தது. இது ஜலதோஷம் முதல் கடுமையான சுவாச நோய்க்குறி வரை அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. WHO அறிக்கையின்படி, கொரோனா வைரஸ், தாக்கினால், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கஷ்டங்கள் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். எனவே மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளவர்கள், சாதாரண ஜலதோச பிரச்சினைக்காகவும் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பரிசோதனைகளுக்கு பிறகு, முழு விவரம் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications