கொடூர தாக்குதல்.. சுருண்டு விழுந்து பலியான 5 வயது சிறுமி.. பேய் விரட்டுவதாக பெற்றோரின் ஷாக் செயல்
மும்பை: மகாராஷ்டிராவில் தர்காவுக்கு சென்று வந்த நிலையில் பேய் பிடித்துள்ளதாக கூறியும் பேய் விரட்டுவதாகவும் பெற்றோரே கொடூரமாக தாக்கியதில் 5 வயது மகள் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சுபாஷ் நகரில் வசித்து வருபவர் சித்தார்த் சிம்னி (வயது 45). இவரது மனைவி பெயர் ரஞ்சனா (42). இதில் சித்தார்த் சிம்னி யூடியூப் வைத்துள்ளார்.
சித்தார்த் சிம்னி -ரஞ்சனி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு 16 வயது ஆகும் நிலையில் இன்னொருவருக்கு 5 வயது நடந்தது. இவர்கள் 2 பேரும் பள்ளியில் படித்து வந்தனர்.
டெல்லி பறந்த பட்னாவிஸ்.. மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்!
தர்காவுக்கு சென்ற குடும்பம்
இந்நிலையில் கடந்த மாதம் குருபூர்ணிமா தினத்தில் சித்தார்த் சிம்னி குடும்பத்துடன் தாகால்காட் பகுதியில் உள்ள தர்காவுக்கு சென்றார். அங்கு சென்று வந்த நிலையில் இருந்து அவரது 2வது மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததாக சித்தார்த் சிம்னி கருதினார். மேலும் தனது மகளுக்கு பேய் பிடித்து இருக்கலாம் என அவர் கருதினார். அதோடு பேயை விரட்டினால் மட்டுமே தனது மகள் இயல்பு நிலைக்கு திரும்புவார் என அவர் நினைத்தார்.
பேய் விரட்டுவதாக கூறி தாக்குதல்
இதுபற்றி அவர் தனது மனைவி ரஞ்சனா மற்றும் உறவினிர் பிரியா (32) ஆகியோரிடம் கூறினர். அவர்களும் பேய் விரட்ட ஒப்புக்கொண்டனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவில் அவர்கள் மூவரும் சேர்ந்து வீட்டில் பூஜை செய்து மாந்தீரக செயலில் ஈடுபட்டு பேய் விரட்டுவதாக கூறி சிறுமியிடம் சில கேள்விகள் கேட்டனர். அவர் அழுதபடி இருந்ததால் சிறுமியை அவர்கள் தாக்கினர்.
மருத்துவமனையில் சிறுமி
இதில் வலி தாங்க முடியாத சிறுமி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து பயந்து போனவர்கள் மறுநாள் காலையில் சிறுமியை அருகே உள்ள தர்காவுக்கு தூக்கி சென்றனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்தையில் சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றனர். இந்த வேளையில் சுதாரித்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் செல்போனில் அவர்களின் கார் பதிவெண்ணை போட்டோ எடுத்து வைத்து கொண்டனர்.
போட்டோ மூலம் விசாரணை
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இறந்தார். சம்பவம் குறித்து ரானா பிரதாப் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதோடு ஊழியர்கள் எடுத்த போட்டோ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரித்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பேய் விரட்டுவதாக கூறி சிறுமியை அடித்து துன்புறுத்தி கொன்றது தெரியவந்தது.
3 பேரும் கைது
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பேய் விரட்டும் மாந்தீரிக செயல்பாட்டை அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதனையும் போலீசார் அறிந்த நிலையில் செல்போனில் உள்ள வீடியோவை சாட்சியாக பறிமுதல் செய்துள்ளனர். பெற்ற மகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பேய் பிடித்திருப்பதாக கூறி அடித்து கொலை செய்த சம்பவம் நாக்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.