மகா. அமைச்சரவை விரிவாக்கம்: ஆதித்யா தாக்கரேவும் அமைச்சரானார்- மீண்டும் துணை முதல்வராக அஜித் பவார்!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. என்சிபியின் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே அமைச்சரானார்.
மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு அமைந்த நிலையிலும் அமைச்சரவை முழுமையாக அமைக்கப்படாமல் இருந்தது.

இதனை முன்வைத்து பாஜக விமர்சித்து வந்தது. இந்நிலையில் இன்று உத்தவ் தாக்கரே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா, என்சிபிக்கு தலா 13, காங்கிரஸுக்கு 10 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன்ன. இன்று மொத்தம் 36 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று வருகின்றனர். அனைவருக்கும் ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

என்சிபியின் மூத்த தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராகி உள்ளார். முன்னாள் முதல்வர் அசோக் சவாணும் அமைச்சராக பதவி ஏற்றார்.
உத்தவ் தாக்கரேவின் மகனும் சிவசேனாவின் இளைஞரணி தலைவருமான ஆதித்யா தாக்கரேவும் அமைச்சராக பதவி ஏற்றார்.












Click it and Unblock the Notifications