இனி இந்த குடும்பம் என்னோடது.. உத்தரகண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்
மும்பை: உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி தந்தையை இழந்த 4 குழந்தைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சோனு சூட். என்னதான் இவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜத்தில் இவர்தான் ஹீரோ. இவரது தயாளு குணம் கொரோனாவுக்கு பிறகுதான் இந்தியாவிற்கு தெரிகிறது.
கொரோனா பாதிப்பால் திடீரென இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் மும்பை உள்ளிட்ட இடங்களில் வேலையில்லாமல் பணமில்லாமல் சிக்கியிருந்த கூலித் தொழிலாளர்களை மீட்டு தனது சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
அத்தோடு பசியால் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களையும் அவர் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் மாடு வாங்க காசு இல்லாமல் இரு மகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்.
செல்போன்
செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்தார். இது போல் தொடர்ந்து நல்லதையே செய்து வருகிறார் சோனு சூட். இந்த நிலையில் மேலும் ஒரு நற்காரியத்தை செய்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறை உருகி கடந்த 7-ஆம் தேதி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தந்தை பலி
இதில் ரிஷிகங்கா, தபோவன் நீர் மின் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துத் செல்லப்பட்டார்கள். ஏராளமானோரின் உடல்கள் மீட்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த நிலையில் தபோவன் நீர் மின் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் பண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
படிப்புச் செலவு
அவரின் வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த நிலையில் இவரது மறைவால் மனைவி, 4 குழந்தைகள் நிலைகுலைந்து போய்விட்டார்கள். இந்த நிலையில் உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 4 மகள்களை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். அஞ்சல், அந்த்ரா, காஜல், அனன்யா ஆகிய 4 பெண் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.
சோனு சூட்டிற்கு பாராட்டு
அத்துடன் அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இனி இந்தக் குடும்பம் என்னுடையது என பதிவிட்டுள்ளார். இதனால் சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிகின்றன.