கடலுக்கு அடியில் 1000 கி.மீ ஸ்பீடு ரயில் வருது.. மும்பை டூ துபாய் செல்ல வெறும் 2 மணி நேரம்தான்!
மும்பை: கடலுக்கு அடியில் 1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. துபாயில் இருந்து இந்தியாவின் மும்பை வரை கடலுக்கு அடியில் 2 மணி நேரத்தில் செல்லும் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சார்ந்த மக்கள் அதிகம் வேலை செய்யும் நாடுகளில் துபாய் முக்கியமானது. வேலைக்காகவும், தொழில்களுக்காகவும் ஏராளமானோர் துபாயில் வசித்து வருகின்றனர்.

இந்தியா - துபாய்
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் விமான போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானத்தில் செல்ல நான்கு மணி நேரம் ஆகும் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் போக்குவரத்து சேவை கூடுதலாகவே தேவைப்படுகிறது. இந்நிலையில் தற்போது கடலுக்கு அடியில் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலுக்கு அடியில் ரயில் சேவை
என்ன.. 2 நாடுகளுக்கு இடையே நீருக்கு அடியில் ரயிலா என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் இது உண்மையிலேயே விரைவில் சாத்தியமாக இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களை பார்த்துக்கொண்டே மணிக்கு 1000 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழமான அரபிக்கடலில் ஒரு ரயில் பயணத்தை நாம் மேற்கொள்ளப்போகும் காலம் தொலைவில் இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஆலோசகர் பணியக லிமிடெட், துபாய் மற்றும் மும்பையை இணைக்கும் அதிவேக நீருக்கடியில் ரயில் என்ற தனித்துவமான திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நீருக்கு அடியில் மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், பயணிகளை மட்டுமல்ல, குடிநீர் மற்றும் எரிபொருளையும் கொண்டு செல்ல முடியும். இந்த திட்டம் நிறைவேறினால், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பயண நேரம் வெறும் இரண்டு மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற நாடுகளுக்கும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஆலோசகர் பணியக லிமிடெட்டின் தலைமை ஆலோசகர் அப்துல்லா அல் ஷெஹி, இந்த திட்டம் பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதை அனுமதிப்பதால், இது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மட்டுமல்ல, ரயில் பாதைகள் கடந்து செல்லும் பிற நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் திட்டத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
2030 ஆம் ஆண்டுக்குள்
விரிவான ரயில் பாதை நெட்வொர்க்கை நீருக்கடியில் நிறுவுவது மிகவும் சவாலான விஷயம். சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே இந்த புராஜெக்ட் செயல்படுத்தப்படும். மேலும், இந்த திட்டத்திற்கு ரயில் நெட்வொர்க் கடந்து செல்லும் நாடுகளின் ஒப்புதல் மற்றும் பல கோடிக்கணக்கான பட்ஜெட் தேவைப்படுகிறது.
துபாய் மற்றும் மும்பை 2000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும். இரு நாடுகளும் இந்த திட்டத்தை அங்கீகரித்தால், கட்டுமானத்தை முடித்து 2030 ஆம் ஆண்டுக்குள் சேவையைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் நிறைவடைந்தால், இந்திய துணைக் கண்டத்தை ஐரோப்பாவுடன் இணைக்கும் பொருளாதார வழித்தடமும் செயல்படும். இந்தத் திட்டம் இந்தியாவையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் கடல் வழியாகவும், இஸ்ரேலை ரயில் நெட்வொர்க் வழியாகவும், ஐரோப்பாவை கடல் வழியாகவும் இணைக்கும் பொருளாதார வழித்தடத்தையும் செயல்படுத்தும்.












Click it and Unblock the Notifications