எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கணும்.. மகாராஷ்டிராவில் போர்க்கொடி உயர்த்திய பிராமணர்கள்
மும்பை: மராட்டியர்களை தொடர்ந்து, தங்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்குமாறு மகாராஷ்டிராவில் உள்ள பிராமணர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார்.

இதனை தொடர்ந்து அந்த மசோதாவுக்கான அரசாணையை மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.குஜராத் மாநிலத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது.படிப்படியாக பெரும்பாலான மாநிலங்கள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில், இடஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதாவது, மராட்டியர்களை போன்று தங்கள் சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதாகும்.
கோரிக்கையை வலியுறுத்தி வரும் 22ம் தேதி அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, சமஸ்த் பிராமண சமாஜ் என்ற அமைப்பைச் சேர்ந்த விஷ்வஜீத் தேஷ்பாண்டே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 சதவீதம் இட ஒதுக்கீடானது சட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் என்பதால் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆகவே, பிராணர்களுக்கு என்று தனியாக இடஒதுக்கீடு தேவை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பொருளாதார ரீதியாக உயரவில்லை. கோயில்களிலும் அவர்களுக்கு போதிய வருமானம் கிட்டுவது இல்லை. அவர்களுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் பென்ஷனாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.
பிராமணர் சமுதாயத்துக்காக தனியாக நல வாரியம், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிராமண சமுதாயத்துக்கு என்று மாணவர் விடுதிகள், பிராமணர்களின் குழந்தைகளுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். எனவே, இந்த முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, ஆசாத் மைதானத்தில் கூடி, போராட்டம் நடத்த உள்ளோம் என்று விஷ்வஜீத் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications