அடுத்து என்ன? மகாராஷ்டிராவில் மலரும் ‛தாமரை’? உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பட்னாவிஸ் தீவிர ஆலோசனை!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கத்தில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனையை துவக்கி உள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இரண்டரை ஆண்டு ஆட்சி முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி வைத்திருப்பதை அக்கட்சியின் எம்எல்ஏக்கள் விரும்பவில்லை.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா- கடந்த 10 நாட்களில் அரங்கேறிய போர்க்கொடி கலகங்கள்!
அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்
இதையடுத்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுஹாத்தி ஓட்டலில் தங்கினர். சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 6 பேரும் இருக்கின்றனர். இதனால் உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களை மீண்டும் வரவழைக்க உத்தவ் தாக்கரே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இது பலன் அளிக்கவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடையில்லை என உத்தரவு
இதையடுத்து 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையே சட்டசபையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது'' என பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது.
உத்தவ் தாக்கரே ராஜினாமா
இந்த உத்தரவை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் அவர் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், பொதுமக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தார்.
பாஜக தீவிர ஆலோசனை
இதற்கிடையே தான் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடையில்லை என உத்தரவு பிறப்பித்ததால் பாஜக மகிழ்ச்சி அடைந்தது. மேலும் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பாஜக எம்எல்ஏக்களுடன் மும்பையில் உள்ள ஓட்டலில் ஆலோசனையை துவக்கி உள்ளார்.
மீண்டும் பாஜக ஆட்சியா?
இதற்கிடையே அசாம் மாநிலம் கவுஹாத்தியில் தங்கி இருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று கோவா சென்றனர். அங்கிருந்தபடி அவர்கள் மகாராஷ்டிரா பாஜக தலைவர் மற்றும் பாஜக மேலிட தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.