ரூ.599 கொடுத்தால் போதும்.. பிரீமியம் கிளாஸில் ஜம்முனு பறக்கலாம்.. ஏர் இந்தியாவின் அட்டகாசமான ஆஃபர்!
மும்பை: இந்தியாவில் விமானச் சேவை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பிரீமியம் பயணத்திற்கான தேவையும் அதிகரிக்கிறது. அதாவது சவுகரியமாகப் பயணிக்க வேண்டும் என அதிகப்படியான மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே அவர்களைக் குறிவைத்து இப்போது ஏர் இந்தியா அட்டகாசமான ஒரு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விமான பயணங்கள் மட்டுமின்றி உள்நாட்டு விமானச் சேவையும் இப்போது அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் விமான டிக்கெட்கள் விலை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

விமான டிக்கெட்கள்
நமது நாட்டை பொறுத்தவரை இத்தனை காலம் இண்டிகோ மட்டுமே விமானத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் கையகப்படுத்திய பிறகு இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முக்கிய ரூட்களில் மார்க்கெட்டை பிடிக்க இரு தரப்பும் கடுமையாக முயன்று வருகிறது.
ரூ.599 மட்டும்
பிரீமியம் பயணத்திற்கான தேவை 3 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதைப் பூர்த்தி செய்ய ஏர் இந்தியா தனது பிரீமியம் எகானமி வகுப்பை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் எகானமி கட்டணங்கள் ரூ.599 முதல் தொடங்குகிறது. வழக்கமான விமான டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக இந்த ரூ.599 செலுத்தினால் பிரீமியம் சேவையைப் பெறலாம். இது அறிமுக கட்டணம் தான் என்றும் ரூட் மற்றும் தேவையைப் பொறுத்து பிரீமியம் சேவைக்கான கட்டணங்கள் மாறலாம் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
எந்த ரூட்கள்
முதற்கட்டமாக இப்போது உள்நாட்டில் 39 ரூட்களில் பிரீமியம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் வாரத்திற்கு 50,000க்கும் மேற்பட்ட பிரீமியம் எகானமி இருக்கைகள் உள்ளன. குறிப்பாக அதிக பிஸியான டெல்லி- மும்பை, டெல்லி- பெங்களூரு, டெல்லி- ஹைதராபாத், மும்பை- பெங்களூர் மற்றும் மும்பை-ஹைதராபாத் போன்ற முக்கிய ரூட்களுக்கு 34,000 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் தனது 27 ஏ320 விமானங்களின் மறுசீரமைப்பு செய்கிறது.. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் எகானமி சீட்களின் எண்ணிக்கை 30% வரை அதிகரிக்கிறது.. இதன் மூலம் மொத்த பிரீமியம் எகானமி இருக்கைகளின் எண்ணிக்கை 65,000ஆக உயரும். உள்நாட்டுச் சேவைக்கும் குறுகிய தூரச் சர்வதேச வழித்தடங்களுக்கும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
என்ன வசதிகள் கிடைக்கும்
ஏர் இந்தியாவின் பிரீமியம் எகானமி சீட்களில் நல்லா கால் நீட்டி அமரக் கூடுதல் லெக் ரூம் கிடைக்கும். மேலும், செக்-இன் முன்னுரிமை, போர்டிங் மற்றும் லக்கேஜ்களில் முன்னுரிமை, மிகச் சிறந்த இருக்கைகள், அட்டகாசமான உணவு ஆகியவை கிடைக்கும் என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நமக்கு எந்த சீட் தேவையோ அதைத் தேர்வு செய்தும் கொள்ளலாம். இந்தியாவில் விமானச் சேவை அதிகரிக்கும் நிலையில், வரும் காலங்களில் பிரீமியம் சீட்களுக்கான தேவை மீண்டும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் இலவச வை-பை சேவையைக் கொண்டு வந்திருந்தது. இதன் மூலம் வானத்தில் பறக்கும்போதும் அதிவேக இணையத்தை யூஸ் செய்யலாம். முதற்கட்டமாக இப்போது இலவசமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதற்கு ஏர் இந்தியா கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications