Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கூட்டணியை முறித்துக் கொள்வோம்”.. அஜித் பவார் வார்னிங்! மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் வெடித்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் மோதல் உச்சமடைந்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என அஜித் பவார் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தல் பரபரப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், ஒருபுறம் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மறுபுறம் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்த கூட்டணியில் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்து வருகின்றன.

Ajit Pawar led NCP threatens to walk out of bjp alliance if Vijay Shivtare is not sacked

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றும், இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருப்பதை ஏற்றால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதனை ஏற்காத பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நீடித்த நிலையில், சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் கிளர்ச்சியால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

இந்தப் பஞ்சாயத்து முடிந்த பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது. மகாராஷ்டிராவில் தற்போது தேசியவாத காங்கிரஸ் 2 அணிகளாகவும், சிவசேனா இரு அணிகளாவும் உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், பாஜக கூட்டணிக்குள் குழப்பங்கள் வெடித்துள்ளன. மஹாராஷ்டிராவில் 48 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 8 தொகுதிகளும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளும் மட்டுமே கொடுக்க பாஜக முன்வந்துள்ளது.

தற்போது சிவசேனா ஷிண்டே பிரிவில் மட்டும் 14 எம்.பிக்கள் இருக்கும் நிலையில், தங்களுக்கு 8 சீட்கள் போதாது, குறைந்தபட்சம் 14 சீட்களாவது வேண்டும் என பாஜகவை வலியுறுத்தி வருகிறார் ஷிண்டே. அதே போல அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி 8 சீட்களை கேட்க, அவர்களுக்கு 4 இடங்களை மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளது.

எனினும், ஷிண்டே மற்றும் அஜித் பவார் கட்சியினர், பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஷிண்டே தரப்பு 12 சீட்கள் வரையும், அஜித் பவார் கட்சிக்கு 5 சீட்கள் வரையும் கொடுக்க பாஜக சம்மதித்துள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் மஹாராஷ்டிராவில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது.

இதற்கிடையே, கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என அஜித் பவார் தரப்பு பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து பாராமதி தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என பேச்சுகள் உள்ளன.

அஜித் பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணியில் தொடர்ந்து மோதல் போக்கு உச்சமடைந்துள்ளது.

கூட்டணியில் இருந்துகொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக அஜித் பவார் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+