‘இந்தியா’ கூட்டணியில் சலசலப்பு.. அடித்து ஆடும் அஜித் பவார்! பெரியப்பா சரத் பவார் என்ன செய்யப்போராரோ?
மும்பை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் தேசியவாத காங்கிரஸ் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்து வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருப்பவர் சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட சமயத்தில் அவரது கட்சியே இரு துண்டானது.

அவரது சொந்த சகோதரர் மகனே கட்சியை இரண்டாக உடைத்து பாஜக - சிவசேனா (ஷிண்டே) தரப்புடன் கைகோர்த்து துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவர்தான் அஜித் பவார். அவருடன் தேசியவாத காங்கிரஸின் மற்றொரு முக்கிய தலைவரான பிரபுல் பட்டேல் உள்ளிட்டோரும் பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டனர்.
கட்சி யாருக்கு என்ற போர் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் சரத் பவார், காங்கிரஸ், சிவசேனாவுடன் இணைந்து மும்பையில் ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அஜித் பவார் வாய் திறந்து இருக்கிறார்.
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, "2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். ஒரு நிலைபாடு எடுக்கும்போது மக்கள் விமர்சிப்பார்கள். ஆனால், அந்த நிலைபாடு எடுத்த பிறகு நமது செயல்பாடுகளால் நாம் பதிலடி தர வேண்டும்." என்று கூறி உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சரத் பவார், தன்னை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்று அறிவித்துக்கொண்டார். மகாராஷ்டிரா மாநில தலைவராக ஜெயந்த் பாட்டிலை அவர் அறிவித்தார். அப்போது பேசிய அவர், "மீண்டும் மீண்டும் அஜித் பவாருக்கு வாய்ப்புகள் வழங்க மாட்டேன். அவர் அதை எதிர்பார்க்கவும் கூடாது." என்றார்.
25 ஆண்டுகள் பழமையான தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களுக்கே சொந்தமானது என்றும், தாங்கள்தான் உரிமையான தேசியவாத காங்கிரஸ் எனவும் சரத் பவார் - அவரது மகள் சுப்ரியா சுலே தரப்பும், அஜித் பவார் - பிரபுல் பட்டேல் தரப்பும் உரிமைகோரி வருகிறார்கள். இது தொடர்பாக சட்டப்போராட்டமும் நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வரும் தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications