போட்டியின்றி எம்எல்ஏவாகும் அஜித் பவார் மனைவி.. காங்கிரஸ் முடிவால் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஹேப்பி
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் விமான விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார். வரும் 23ம் தேதி பாராமதி சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் சுனேத்ரா பவார் போட்டியின்றி வெற்றி பெறும் நிலை உருவாகி உள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த ஜனவரி மாத இறுதியில் விமான விபத்தில் சிக்கி பலியானார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார்.

மேலும் கணவர் விட்டு சென்ற மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியையும் சுனேத்ரா பவார் ஏற்று செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் தனது கணவர் அஜித் பவார் வென்ற பாராமதி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் அதேநாளில் தான் பாராமதி சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுனேத்ரா பவார் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஆகாஷ் மோர் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. இவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்நிலையில் தான் ஆகாஷ் மோர் போட்டியில் இருந்து விலகுவதாக கூறி தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். காங்கிரஸ் மேலிட அறிவுரைப்படி அவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ளார்.
அதாவது அஜித் பவார், சரத்பவாரின் அண்ணன் மகன் ஆவார். இந்நிலையில் தான் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சூலே ஆகியோர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றனர். 'இந்தியா' கூட்டணியில் உள்ளனர். இந்நிலையில் தனா் சரத்பவார், சுப்ரியா சூலே ஆகியோர் பாராமதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை போட்டியில் இருந்து வாபஸ் பெற வேண்டும்.
அஜித் பவாருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு கொண்டனர். மேலும் இதற்கு முன்பு அஜித் பாவார் காங்கிரஸ் கூட்டணியில் செயல்பட்டுள்ளார். இதனால் அஜித் பவாருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் காங்கிரஸ் மேலிடம் வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.
இதன்மூலம் இந்த பாராமதி சட்டசபை இடைத்தேர்தலில் சுயேச்சைகள் மட்டுமே களத்தில் உள்ளன. எந்த பெரிய கட்சிகளும் போட்டியில் இல்லை. இதனால் சுனேத்ரா பவார் போட்டியின்றி எம்எல்ஏவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications