இழுபறி ஓவர்- மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. உள்துறையை கைப்பற்றியது பாஜக
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்கு தற்போது இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு முக்கிய துறைகள் ஒதுக்குப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்னாத் ஷிண்டேவே கவிழ்த்துவிட்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்தது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியது.
இதனால் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிபுரிந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனாவின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

எதிர்க்கட்சியினர் கேலி
தொடர்ந்து மராட்டியத்தின் முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியும் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்ய தொடங்கினர். 2 பேர் மட்டுமே அமைச்சர் பதவி ஏற்றுவிட்டு மற்றவர்களை நியமிக்காமல் இருந்தது பாஜகவுக்கும் சற்று கஷ்டத்தை ஏற்படுத்தியது.

அமைச்சரவை விரிவாக்கம்
தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் எப்போதும் நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், கடந்த 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்று விட்டு திரும்பிய நிலையில் அன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், மொத்தம் 12 பேருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. பாஜனதா சார்பில் சுதீர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதேபோல் மராட்டிய முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிவசேனா சார்பில், குலாப் ரகுநாத் பாட்டீல், சதா சர்வான்கர், தீபக் வசந்த் கேசர்கர் ஆகியோர் பதவியேற்றனர்.

இலாக்காக்கள் ஒதுக்கீடு
ஆனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் இருந்ததை எதிர்க்கட்சியினர் மீண்டும் கேலி கிண்டலுக்கு ஆளாக்கினர். இது தொடர்பாக ஆளும் கூட்டணியை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வசைபாடி வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்னாவிசுக்கு உள்துறை
மகாராஷ்டிர முதல்வர் ஏக்னாத் ஷிண்டே ஏற்கனவே தன்னிடம் இருந்த நகர்புற வளர்ச்சித்துறையை தன்வசமே வைத்துக்கொண்டுள்ளார். இத்துடன் அவருக்கு கூடுதலாக சுற்றுச்சூழல், சிறுபான்மை, போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு உள்துறை மற்றும் நிதி மற்றும் திட்டம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு சட்டம் மற்றும் நீதி, நீர் வளங்கள், வீடுகள் மற்றும் எரிசக்தி துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுதிர் முங்கண்டிவாருக்கு
இதேபோல பாஜகவை சேர்ந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு வருவாய் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவை சேர்ந்த சுதிர் முங்கண்டிவாருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிர பாஜகவின் முன்னாள் தலைவரான சந்திரகாந்த் பாட்டீலுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த தீபக் கேசர்கருக்கு பள்ளி கல்வித்துறையும், அப்துல் சட்டருக்கு விவசாயத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர கவர்னரின் ஒப்புதலை பெற்ற பிறகு அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் புதிய அரசு பொறுப்பேற்ற 7 வாரங்களுக்குப் பிறகு இன்று அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications