ஹர்திக் பாண்டியாவை எப்படியெல்லாம் திட்டுனீங்க! டி20-யில் பார்த்தீர்களா! ஆனந்த் மகிந்திரா புகழ்ச்சி!
மும்பை: வாழ்க்கை நம்மை வீழ்த்தினாலும் நம்மால் எழுச்சி காண முடியும் என்பதைத்தான் டி20 உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு நமக்கு உணர்த்துவது என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களை வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி இருந்தார்.

அதில் 6 இன்னிங்ஸில் பேட் செய்து 144 ரன்கள் எடுத்திருந்தார். 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 176 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் 177 என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 169 ரன்களை பெற்று தோல்வி அடைந்தது. 2ஆவது முறையாக டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது.
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மகிந்திரா. அவர் மண்டே மோட்டிவேஷன் என்ற தலைப்பில் திங்கள் தோறும் ஒரு உத்வேகம் அளிக்கும் விஷயத்தை சமூகவலைதளத்தில் பகிர்வார். இவரது பதிவுகள் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் பெறும்.
அந்த வகையில் அவர் இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து ஒரு பதிவை போட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா குறித்து ஆனந்த் மகிந்திரா தெரிவித்திருந்தார். அவருடைய பதிவில் கூறியிருப்பதாவது: நன்றாக பாருங்கள். இந்த முகத்தை தான் விளையாட்டு களத்திலும் சமூகவலைதளங்களிலும் கடுமையாக சில மாதங்களுக்கு முன்பு விமர்சித்து இருந்தீர்கள்.
இதோ அவர் கண் கலங்கி நிற்பதை பாருங்கள். அது அவரது மீட்சியின் வெளிப்பாடு. இந்த புகைப்படத்தை எடுத்த போது அவர் மீண்டும் நாயகனாகி இருந்தார். டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பதற்றம் நிறைந்த இறுதி ஓவரை வீசினார். அது போல் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய வீரராகவும் அவர் திகழ்ந்தார். இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் வாழ்க்கை நம்மை வீழ்த்தினாலும் நம்மால் எழுச்சி காண முடியும் என்பதை அவரது கண்ணீரின் மூலம் நாம் அறியலாம். இவ்வாறு ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications