காதலர் தினம் முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் அண்ணா ஹசாரே.. என்ன காரணம்?
மும்பை: மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக வருகிற திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக சமூக சேவகரான அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ்-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
மாநிலத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் கடைகளில் ஒயின் வகை மது விற்பனையை அனுமதிக்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு கடந்த மாத இறுதியில் கொண்டு வந்தது.

சூப்பர் மார்கெட்டுளில் ஒயின் விற்பனை
மகாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 1,000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் "ஷெல்ஃப்-இன்-ஷாப்" முறை மூலம் ஒயின் வகை மது விற்பனை செய்யலாம் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அண்ணா ஹசாரே எதிர்ப்பு
மகாராஷ்டிரா அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. 'சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் அரசு கொரோனா தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு உதவவில்லை, ஆனால் மாநிலத்தில் மக்களை மது அருந்துவதை ஊக்குவிக்கிறார்கள'' என்று குற்றம்சாட்டி இருந்தது. சமூக சேவகரான அண்ணா ஹசாரேவும் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக பொங்கியெழுந்தார்.

முதல்வருக்கு கடிதம்
மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணா ஹசாரே கூறி இருந்தார். ''சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு அரசுக்குத் துரதிர்ஷ்டவசமானது, வரும் தலைமுறையினருக்கு இது ஆபத்தானது. இந்த முடிவை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன்' என்று அவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவாருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

காதலர் தினம் முதல்...
இந்த நிலையில் சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் கடைகளில் ஒயின் வகை மது விற்பனை செய்வதை கண்டித்து வருகிற திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக சமூக சேவகரான அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான ஒரு மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்தவர் அண்ணா ஹசாரே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications