ஆடி கார் மீது லேசாக உரசிய ஓலா கேப்.. ஓட்டுநரை தூக்கிப்போட்டு தாக்கிய உரிமையாளர்.. வீடியோ வைரல்
மும்பை: மகாரஷ்டிர மாநிலத்தில் சொகுசு காரான ஆடி காரின் மீது ஓலா கேப் கார் லேசாக உரிசியதில் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கேப் ஓட்டுநரை தூக்கிப் போட்டு சரமாரியாகத் தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை, காட்கோபரில் உள்ள மாலின் எதிரே உள்ள கட்டடத்தின் நுழைவுப் பகுதியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஆடி கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருக்கிறது. அதன் பின்னால் ஓலா கேப் ஒன்று செல்கிறது.

ஒரு பில்டிங்குக்குள் ஆடி கார் நுழைந்தபோது, ஓலா கேப்பும் அதன் பின்னால் செல்கிறது. இந்நிலையில், முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் வந்த ஓலா டாக்சி டிரைவரின் கார் சொகுசு காரில் பம்பரில் லேசாக மோதுகிறது. இதையடுத்து, ஆடி காரில் இருந்த அனைவரும் இறங்கிவந்து காரில் ஏற்பட்ட சேதத்தைப் பார்க்கின்றனர்.
அதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஆடி காரின் உரிமையாளர், ஓலா காரின் ஓட்டுநரை சினிமாவில் வருவதுபோல அப்படியே தூக்கி கீழே வீசி தாக்குதலில் ஈடுபடுகிறார். இதில், கேப் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சொகுசு காரின் உரிமையாளர் ரிஷப் சக்ரவர்த்தி என்பதும், அந்த காரில் அவருடன் அவரது மனைவி அந்தரா கோஷும் மற்றும் சிலரும் பயணித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
சொகுசு கார் உரிமையாளர் தாக்கியதில் பாதிக்கப்பட்ட ஓலா கேப் ஓட்டுநர் ரிஷப் கயாமுதீன் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆடி கார் உரிமையாளர் ரிஷப் சக்ரவர்த்தி, அவரது மனைவி அந்தரா கோஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர், இப்போதெல்லாம் தங்களது பலத்தைக் காட்டுவதற்காக பலவீனமான நபர்கள் மீது பலத்தை காட்டுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். தெரியாமல் செய்த தவறுக்கு உரிய இழப்பீடு கேட்டிருக்கலாம், காப்பீடு பெற்றிருக்கலாம் அதைவிட்டு தாக்குதல் நடத்துவது காட்டு மிராண்டித்தனம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஆடி உலகளவில் முன்னணி லக்சரியான கார் நிறுவனங்களில் ஒன்று. ஜெர்மனைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் மட்டும் 1 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்கு இந்தியாவுக்கு அறிமுகமான இந்நிறுவனம் 17 வருடங்களில் 1 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் தற்போது 15 வகையான கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications