சாலையில் நடந்தால் போலீஸ் பிடிப்பார்கள் என தண்டவாளத்தில் நடந்ததால் ஏற்பட்ட அவுரங்காபாத் விபரீதம்
மும்பை: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு சரக்கு ரயிலில் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
உணவுக்கும், வேலைக்கும் வழியில்லாததால், ஊருக்கு செல்வதற்கே பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லவே விரும்புகிறார்கள். ஆனால் ரயில்களும், பேருந்துகளும் இல்லாததால் ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே நடந்து செல்கிறார்கள்.
இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் தினசரி பல்லாயிரம் பாதங்கள் சாலைகளின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றன.

17 தொழிலாளர்கள்
அப்படிச்சென்ற ஆயிரக்கணக்கான தொழிலார்களில் இன்று உயிரிழந்த 17 தொழிலாளர்களும் அடக்கம். 17 தொழிலாளர்களும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள் சாலைகளில் நடந்தால் காவல் துறை பிடித்து விடும் என்று அஞ்சி, அவர்கள் ரயில்பாதை அருகே நடந்து சென்றிருக்கின்றனர். 36 கிலோ மீட்டர் நடந்த நிலையில் அவர்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்தார்கள்.

வந்தது சரக்கு ரயில்
ரயில்கள் எதுவும் வராது என்று நினைத்த அவர்கள் ரயில் தண்டாவளத்திலேயே அசதியுடன் வெள்ளிக்கிழமை (இன்று) விடியற்காலையில் உறங்கி கொண்டிருந்திருக்கிறார்கள். சரக்கு ரயில்கள் போக்குவரத்துக்கு தடையில்லை என்பது பாவம் அவர்களுக்கு தெரியாது போல.. இன்று அதிகாலை சரக்கு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

ஏறியது ரயில்
வெளிச்சம் இல்லாததால் தண்டவாளத்தில் மனிதர்கள் படுத்து இருப்பது ஓட்டுநருக்கு சரியாக தெரியவில்லை. பல கிலோமீட்டர் நடந்து வந்ததால் தொழிலாளர்கள் யாருக்கும் ரயில் வரும் சத்தமும் கேட்கவில்லை. இந்நிலையில் சில மீட்டர் தூரத்தில் இருக்கும் போது ஓட்டுநர் சிலர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை கவனித்து இருக்கிறார். உடனே பிரேக் போட முயன்றுள்ளார். எனினும் அவர்கள் அனைவர் மீது ரயில் ஏறி நசுக்கியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உதவிகள் செய்யப்படும்
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதால் மிகுந்த வேதனை அடைந்தேன். . ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசியுள்ளேன். அவர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்"என்று கூறியுள்ளார். ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications