"பால் தாக்கரே ஆசீர்வாதத்தால் நாங்கள் வென்றோம்".. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 'பரபர' ட்வீட்
"பால் தாக்கரேவின் ஆசிர்வாதத்தால்தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அவரது ஆசியுடனே நாங்கள் அரசை அமைத்தோம். பால் தாக்கரேவின் சித்தாந்தங்களையே முன்னெடுத்து செல்கிறோம்"
மும்பை: சிவசேனா கட்சி தனது தலைமையிலான அணிக்குதான் சொநதம் என தேர்தல் ஆணையம் அறிவித்த சூழலில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் சமாதிக்கு நேற்று இரவு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்
மேலும், பால் தாக்கரேவின் ஆசீர்வாதமே தங்கள் வெற்றிக்கு காரணம் என்றும், அதனால்தான் இந்த வெற்றியை தாங்கள் கொண்டாடுவதாகவும் அவர் கூறினார்.
எனினும், தனது பதிவில் உத்தவ் தாக்கரே குறித்து எந்தவொரு விமர்சனத்தையும் ஏக்நாத் ஷிண்டே வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்த பிரச்சினை
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவின் துணையுடன் ஆட்சி நடத்தி வருபவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இதனிடையே, சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரே அணியும், ஷிண்டே அணியும் சொந்தம் கொண்டாடி வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், சிவசேனா கட்சி ஷிண்டே அணிக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது. மேலும், அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியது.

கொந்தளிப்பில் உத்தவ் ஆதரவாளர்கள்
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, உத்தவ் அணிக்கு பெருத்த பின்னடையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் இரு அணிகளுக்கு இடையேயும் மோதல் உருவாகும் சூழல் காணப்படுகிறது. இதனால் பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"ஷிண்டே ஒரு துரோகி"
அவர்கள் (ஷிண்டே அணி) சிவசேனாவின் சின்னத்தை திருடிவிட்டனர். ஒருமுறை துரோகம் செய்தவன் எப்போதுமே துரோகியாகவே இருப்பான் என பழமொழி உண்டு. அதற்கு உதாரணமாக மாறிவிட்டார் ஷிண்டே. தான் செய்த திருட்டுக்கு தற்காலிகமாக வெற்றி கிடைத்திருப்பதால் ஷிண்டே இன்று மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்காது. துரோகத்துக்கு நிச்சயம் நாங்கள் பழிதீர்ப்போம். சிவசேனாவை மீட்க தொடர்ந்து போராடுவோம். பொறுத்திருந்து பாருங்கள் ஷிண்டே" என உத்தவ் தாக்கரே கூறினார்.

பால் தாக்கரேவுக்கு அஞ்சலி
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று இரவு மும்பையில் உள்ள பால் தாக்கரேவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பால் தாக்கரேவின் ஆசிர்வாதத்தால்தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அவரது ஆசியுடனே நாங்கள் அரசை அமைத்தோம். பால் தாக்கரேவின் சித்தாந்தங்களையே முன்னெடுத்து செல்கிறோம். எனவேதான், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். கொண்டாடுகிறோம்" என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications