ஆட்சியை கைப்பற்ற அலைவது பாஜக அல்ல - சிவசேனா பிளவால் ஆட்சி கவிழ்ந்தது - ஏக்நாத் ஷிண்டே ஓபன் டாக்!
மும்பை : பாஜக ஆட்சியை கைப்பற்ற அலையும் கட்சி அல்ல என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மகா விகாஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலில், பாஜக-வின் கூட்டணியை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். மேலும், சிவசேனா கட்சித் தலைவர்களும், பாஜக தலைவர்களும் ஒருவொருக்கொருவர் விமர்சித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து சென்றதால், மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி, கடந்த மாதம் கவிழ்ந்தது. இதனையடுத்து, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரினார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற 41 நாட்கள் கழிந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தானே மாவட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிம் பேசியதாவது:- என்னை முதலமைச்சராக ஆக்கியதன் மூலமாக பாஜக மூத்த தலைவர்கள் பெரிய மனதை நிரூபித்துள்ளனர். பாஜக எப்போதும் ஆட்சியை அபகரிக்க அலைவதில்லை. மகாராஷ்டிரா துணை முதவர் தேவேந்திர பட்னாவிசுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினேன்.
அப்போது, அமித்ஷா என்னிடம் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு பாஜகவை விட குறைந்த எண்ணிக்கை இருந்தபோதும் நிதிஷ் குமாரை அங்கு முதலமைச்சராக ஆக்கினோம். நாங்கள் உங்கள் கட்சிக்கு(சிவசேனா) முதலமைச்சர் பதவி குறித்து வாக்கு கொடுத்திருந்தால் அதில் இருந்து ஏன் பின்வாங்க போகிறோம் என்று என்னிடம் கூறினார்.
மகாராஷ்டிரா மக்கள் 2019-ம் ஆண்டு பா.ஜனதா, சிவசேனா கூட்டணிக்கு தெளிவாக ஆட்சி அமைக்க அதிகாரம் வழங்கினர். ஆனால் பின்னர் நிலைமை சரியான திசையில் செல்லவில்லை. உத்தவ் தாக்கரேவிடம் இதுகுறித்து நான் பலமுறை விளக்கினேன். ஆனால் எல்லாம் வீணானது. இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்காலத்தில் வாக்காளர்களை நம்மால் எதிர்கொள்ள முடியாது என்றும் நான் அவரிடம் கூறியிருந்தேன்.
நான் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக சிவசேனா தலைமையை எதிர்க்கவில்லை. மக்கள் எனக்கு கொடுத்த அன்பும், பாசமும் தான் சிவசேனா தலைமைக்கு எதிரான செயல்பாட்டுக்கு பிறகு நான் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலாகும். அநீதிக்கு எதிராக போராடுவதற்கு சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே ஆகியோரின் போதனைகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
பீகாரில் ஒரு “ஏக்நாத் ஷிண்டே”.. பாஜக திட்டம் முறியடிப்பு! சுதாரித்த நிதீஷ் - கழற்றிவிடப்பட்ட தாமரை