இன்னும் 11 எம்எல்ஏக்கள்தான்.. ஆட்சி கட்டிலை நெருங்கும் பாஜக.. மகாராஷ்டிராவில் உச்சகட்ட பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பதில் தீவிரம் காட்டுகிறது பாஜக. சிவசேனாவின் 13 எம்.எல்.ஏக்களை ஏற்கனவே வளைத்துவிட்ட பாஜகவுக்கு ஆட்சியை கவிழ்க்க மேலும் 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்ற நிலையில் மகாராஷ்டிரா அரசியல் அனல் பறக்கிறது.
Recommended Video
மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 288. சட்டசபையில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதாவது மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி பாஜகதான். ஆனால் சிவசேனா (55), காங்கிரஸ் (42), தேசியவாத காங்கிரஸ் (52) மற்றும் சிறு கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது.

ராஜ்யசபா தேர்தல், சட்ட மேலவை (எம்.எல்.சி) தேர்தலில் பாஜக ஆடிய கண்ணாமூச்சி ஆட்டங்களால் இப்போது சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. அதிலும் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 13 எம்.எல்.ஏக்களை அலேக்காக பாஜக வளைத்து குஜராத்தின் சூரத் ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளது. தற்போதைய நிலையில் சிவசேனா கூட்டணி அரசுக்கு 151 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 145 எம்.எல்.ஏக்கள். ஆகையால் இந்த நிமிடம் வரை சிவசேனா கூட்டணிக்கு ஆபத்து இல்லை.
அதேநேரத்தில் சிவசேனா எம்.எல்.ஏக்களை வளைத்ததன் மூலம் பாஜகவுக்கான ஆதரவு என்பது 134 ஆக அதிகரித்துள்ளது. பாஜகவை சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பலரும் ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக ஆட்சி அமைக்க- அதாவது பெரும்பான்மையை பெறுவதற்கு தேவை இன்னும் 11 எம்.எல்.ஏக்கள்தான்.
கடந்த காலங்களில் மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் ஆளும் அரசுகளை கவிழ்த்தது போல இப்போது மகாராஷ்டிராவிலும் கொத்தாக எம்.எல்.ஏக்களை தூக்கிய பாஜகவுக்கு மேலும் 11 பேரை தூக்குவது கடினம் அல்ல எனவும் கூறப்படுகிறது. இப்படியான ஒரு பரபரப்பான நிலையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அடுத்த கட்ட ஆலோசனைக்காக டெல்லி விரைந்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆட்சி கவிழ்ப்பு, புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பட்னாவிஸ் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications