பாஜக, ஆர்எஸ்எஸ் ஜனநாயகத்துக்கு பேராபத்து.. "அரசியல் சாசனம் காணாமல் போய்விடும்" - கார்கே எச்சரிக்கை
மும்பை: பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்திய ஜனநாயகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டு மக்களை அவை பிரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுதான் பாஜகவின் அரசியல் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் இன்னும் விழித்துக் கொள்ளாவிட்டால், நமது அரசியலமைப்புச் சட்டத்தையே அவர்கள் முழுமையாக அழித்துவிடுவார்கள் என்றும் கார்கே எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே, மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. அரசியல் ரீதியாக பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பதால், மக்களை காங்கிரஸ் பயமுறுத்தி வருவதாக பாஜக தெரிவித்துள்ளது.

மோடியை அட்டாக் செய்யும் கார்கே
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்றது முதலாகவே, பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே. குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை 'ராவணன்' என அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல, சீனா - இந்தியா எல்லை மோதல் விவகாரத்திலும் பிரதமர் மோடியை கார்கே கடுமையாக தாக்கி பேசினார்.

பேராபத்தில் ஜனநாயகம்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாளையொட்டி மும்பையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கூறப்போகிறேன். இந்திய ஜனநாயகம் இன்று பேராபத்தில் இருக்கிறது. பாஜகவால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

"அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள்"
நம் நாட்டு இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர். சிறுபான்மையினர் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நமது அரசியலமைப்பு சட்டத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றன. மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டு மக்களை அவை பிரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுதான் பாஜகவின் அரசியல். நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, மக்களை பிரித்து அரசியல் செய்வதுதான் அவர்களின் வேலை.

"காங்கிரஸை ஆதரிக்காவிட்டால்"..
பாஜகவின் இந்த மோசமான அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவிடம் இருந்து அரசியலமைப்புச் சட்டத்தை மீட்க வேண்டும் என்றால் அது காங்கிரஸால் மட்டுமே முடியும். எனவே, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், காங்கிரஸை ஆதரிக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால், நம் ஜனநாயகத்தை யாரும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.












Click it and Unblock the Notifications