பாஜகவுக்கு படுதோல்வி- “நட்டநடு நாயகமாக சரத்பவார்”.. “இந்தியா” கூட்டணியை உடைக்கும் முயற்சி டக் அவுட்!
மும்பை: "இந்தியா" கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எப்படியாவது வெளியேற்றிவிடலாம் என பாஜக மேற்கொண்ட பகீரத முயற்சிகள் அத்தனையும் தோல்வியைத் தழுவிவிட்டன. மும்பையில் இன்று நடைபெறும் "இந்தியா" கூட்டணியில் சரத்பவார் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
"இந்தியா" கூட்டணியின் 2-வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது தேசியவாத கட்சியின் தலைவர் சரத்பவாரை திடீரென பாஜக ஆதரவு துணை முதல்வர் அஜித் பவார் சந்தித்து பேசினார். இதனால் "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. "இந்தியா" கூட்டணியில் இருந்து சரத்பவாரை வெளியேற்றத்தான் பாஜக முயற்சிக்கிறது என்பது பொதுவான கருத்தாக இருந்தது. இதற்கேற்ப சரத்பவாரும் பெங்களூர் கூட்டத்தின் முதல் நாளில் பங்கேற்கவும் இல்லை.

ஆனால் திடீரென பெங்களூர் கூட்டத்தில் 2-வது நாளில் சரத்பவார் பங்கேற்றார். ஆனாலும் பாஜக விடுவதாக இல்லை. அஜித்பவாரை இடைவிடாமல் அனுப்பிக் கொண்டே இருந்தது. சரத்பவாருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த வைத்தது பாஜக. இதனால் ஒரு கட்டத்தில் சரத்பவார் மதில்மேல் பூனை நிலைக்கு தள்ளப்பட்டும்விட்டார். தேசியவாத காங்கிரஸில் நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்; எங்களில் சிலர் பாஜகவை ஆதரிக்கின்றனர்.. எங்கள் கட்சியில் பிளவு எதுவும் இல்லை என பேட்டி கொடுத்து "இந்தியா" கூட்டணிக்கு பீதியை ஏற்படுத்தினார் சரத்பவார்.
இதனால் மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பாரா? அல்லது பாஜக மகிழும் வகையில் "இந்தியா" கூட்டணி கூட்டத்துக்கு குட்பை சொல்வாரா? என்ற குழப்பம் தொடர்ந்தது. ஆனால் நேற்று "இந்தியா" கூட்டணி கூட்டம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சரத்பவாரும் நடுநாயகமாக இருந்தார். இந்தியா கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இடம் பெறும் என்பதுதான் இப்போதைக்கு அந்த அணியின் தலைவர்களுக்கான நிம்மதியான செய்தி. பாஜகவின் இதுவரையிலான முயற்சிக்கு முதல் கட்ட பின்னடைவாகவே இது பார்க்கப்படுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications