ஐ.க்யூ. கம்மியா உள்ள பெண், குழந்தை பெற்று கொள்ள கூடாதா? நுண்ணறிவு திறன் குறைந்தால்? மும்பை ஹைகோர்ட்
மும்பை: நுண்ணறிவு திறன், சராசரியைவிட சற்று குறைவாக இருப்பதால், ஒரு பெண்ணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா? என்று மும்பை ஹைகோர்ட் வழக்கு ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு குறித்து அமர்வு அளித்துள்ள உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சமீபத்தில் டெல்லி ஹைகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில், "கருவிலுள்ள குழந்தைக்கு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 30 வார வளர்ச்சியடைந்த கருவை கலைக்க 31 வயது பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

கோளாறுகள்: கடுமையான உடல்நலக் கோளாறுகளுடன் பிறக்க இருக்கும் கருவை பெண்கள் சுமக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை சட்டம் உறுதி செய்வதாகவும் நீதிமன்றம் அந்த வழக்கில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நுண்ணறிவு திறன், சராசரியைவிட சற்று குறைவாக இருப்பதால், ஒரு பெண்ணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா? என்று மும்பை ஹைகோர்ட் வழக்கு ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளது. திருமணமாகாத, ஐ.க்யூ. குறைவாக உள்ள அதாவது நுண்ணறிவு திறன் குறைவாக உள்ள 27 வயது மகளின், 21 வாரக்கருவை கலைக்க அனுமதி கோரி, அந்த பெண்ணின் தந்தை, மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மூளை வளர்ச்சி: இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாவது: "இந்த பெண், ஐந்து மாதக்குழந்தையாக இருந்தபோது மனுதாரர் தத்தெடுத்து வளர்த்து உள்ளார். தன்னுடைய பெண்ணுக்கு மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதால், கருவை கலைக்க அனுமதி கேட்டிருக்கிறார்.. இதையடுத்து, பரிசோதனை செய்த டாக்டர்கள் குழு, "அந்த பெண்ணுக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு ஏதும் இல்லை. ஐ.க்யூ. எனப்படும் நுண்ணறிவு திறன், சராசரியைவிட, சற்றுக்குறைவாக உள்ளது" என்று கூறியுள்ளது.
மேலும், அந்த பெண் முழுஉடல் தகுதியுடன் இருப்பதாகவும், விருப்பப்பட்டால், கருவை கலைக்கலாம் என்றும் டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது. அந்த பெண்ணின் கருவைக் கலைக்க வேண்டும் என்று அவருடைய தந்தை வழக்கு தொடர்ந்து உள்ளார்.
ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள அந்தப் பெண் விருப்பப்படுகிறார். நுண்ணறிவு திறன் சராசரியைவிட சற்று குறைவாக இருப்பதால், அவர் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? அவ்வாறு கூடாது என்று நாங்கள் உத்தரவிட்டால், அது சட்டத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும்.
திருமணம்: அந்த பெண், தன்னுடைய கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார்.. குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்து வளர்த்துள்ள மனுதாரர், இந்த பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமானவரிடம் பேசி, திருமணம் நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்" என்று தன்னுடைய உத்தரவில் அமர்வு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications