முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நின்ற பச்சை கலர் கார்.. திறந்து பார்த்தால் பயங்கரம்.. அதிர்ச்சி
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நின்றிருந்த காரில் பயங்கர வெடிபொருள் கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது. இதனால் முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதுபற்றி விசாரிக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பையில் கார்மைக்கேல் சாலையில் 'அண்டிலியா' என்ற பெயரில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று உள்ளது.
இங்குதான் தனது குடும்பத்துடன் முகேஷ் அம்பானி வசித்து வருகிறார். இந்த பங்களாவை சுற்றிலும் எப்போதும் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியாகும்.
முகேஷ் அம்பானி
இந்நிலையில் நேற்று முகேஷ் அம்பானியின் பங்களாவிற்கு வெளியே சந்தேகத்துக்கு இடமான சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மும்பை போலீசார் விரைந்து சென்றனர்
தீவிர சோதனை
அங்கு நின்றிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தி அதை அகற்றினர். அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய், முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருட்கள் கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
செக்யூரிட்டி கார்
இதுபற்றி போலீசார் கூறுகையில், வெடிப்பதற்கு தயார் நிலையிலான வெடிபொருட்கள் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் கண்டறியப்படவில்லை. ஆனால் வெடிபொருளான ஜெலட்டின் குச்சிகள் பச்சை கலர் காரில் இருந்தது. அந்த கார் நம்பர் பிளேட் அம்பானிக்கு பாதுகாப்பு பணி செய்து வருபவர்களில் ஒருவரின் காரின் நம்பர் பிளேட் ஆக இருந்தது தெரியவந்துள்ளது. அந்த காரில் ஜெலட்டின் குச்சிகளுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது என்றார்கள்.
1 மணிக்கு வந்த கார்
போலீஸ் தரப்பில் இதுபற்றி மேலும் கூறுகையில், மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து கண்டுபிடிக்க முயன்று வருகிறார்கள். யார் ஜெலட்டின் குச்சிகளை அங்கு வைத்தது. அவரை மிரட்டும் நோக்கில் யாரேனும் வைத்தார்களா, விவசாயிகள் போராட்டத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம் என்றார்கள். அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதிகாலை ஒரு மணிக்கு கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனத்திற்கு பின்னால் ஒரு வெள்ளை கலர் கார் செல்கிறது. அந்த காரில் உள்ளவர்கள் யார், அதை ஓட்டியவர் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.