மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் களமிறங்கும் சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் வாரிசுகள் உருவாக்கிய 3-வது அணி!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் மகாயுதி, எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி ஆகிய கூட்டணிகளுக்கு எதிராக சத்ரபதி சிவாஜியின் வழித் தோன்றல் சம்பாஜி சத்ரபதி, அண்ணல் அம்பேத்கரின் கொள்ளுப் பேரன் ராஜ் ரத்னா உள்ளிட்டோரது கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'பரிவர்தன் மகாசக்தி' என்ற 3-வது அணியும் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாயுதி, மகா விகாஸ் அகாடி கூட்டணிகளின் குழப்ப அரசியலால் மகாராஷ்டிரா மாநில மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் 3-வது அணி களமிறங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இன்று அல்லது அடுத்து வரும் சில நாட்களில் மகாராஷ்டிரா தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடிகள் இடையேதான் போட்டி நிலவுகிறது. தற்போது மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் 3-வது அணி களமிறங்குகிறது.
சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல் சம்பாஜி சத்ரபதியின் சுயராஜ்ய கட்சி தலைமையில் இந்த 3-வது அணி களமிறங்க உள்ளது. இது தொடர்பாக சம்பாஜி சத்ரபதி கூறுகையில், எங்களது சுயராஜ்ய கட்சி, அம்பேத்கரின் கொள்ளு பேரன் ராஜ் ரத்னா அம்பேத்கர், பச்சு கடுவின் பிரகார் ஜனசக்தி கட்சி, ஸ்வாபிமானி சங்கடனா கட்சி உள்ளிட்டவை இணைந்து பரிவர்தன் மகாசக்தி என்ற பெயரில் 3-வது அணியை உருவாக்கி உள்ளோம். மகாராஷ்டிராவின் நலனுக்காக இந்த 3-வது அணி உருவாக்கப்பட்டுள்ளது.
மகாயுதி, மகா விகாஸ் அகாடிகளின் அரசியல் அனைத்தும் குழப்பமானது. இத்அனால் மகாராஷ்டிரா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 17-ந் தேதி 3-வது அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மகாராஷ்டிரா தேர்தலில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் 3-வது அணி போட்டியிடும். மகாயுதி, மகா விகாஸ் அகாடி கூட்டணிகளில் இருந்து வெளியேறி யார் வந்தாலும் இந்த அணியில் இணைந்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications