சீனா டூ பாகிஸ்தான் சென்ற கப்பல்.. உள்ளே அணு ஏவுகணை! மும்பையில் ரவுண்டு கட்டி அதிகாரிகள் பறிமுதல்
மும்பை: பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட சீனாவை சேர்ந்த அணு ஆயுதங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை நவா சேவா துறைமுகத்தில் கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தன. இது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக அந்த சரக்கை சோதனையிட்ட போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அதன் உள்ளே இருந்தது அணு ஆயுதங்களை சுமந்து கண்டம் விட்டு கண்டும் பாய்ந்து தாக்கி அழிக்கும் ஏவுகணை.

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி மால்டா நாட்டு கொடி பொருத்தப்பட்ட கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. மும்பை நவ சேவா துறைமுகத்திற்கு வந்த அந்த கப்பலை சந்தேகத்தின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு இருக்கிறார்கள். அப்போதுதான் அதில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரி நாடுகளை தாக்கி அழிக்கும் பலிஸ்டிக் மிசைல் என்று சொல்லப்படும் ஏவுகணை இருந்தது தெரியவந்தது.
பரபரப்பானது மும்பை துறைமுகம்.. சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்தனர். கராச்சி நோக்கி சென்றது அணு ஏவுகணை தான் என்பதை உறுதி செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுங்கத்துறை உதவியுடன் அதனை பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள ஷேக்காவ் துறைமுகத்தில் இருந்து இந்த கப்பல் புறப்பட்டு வந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த சிஎன்சி கருவிகள் கணினியின் மூலமாக இயக்கப்படுபவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் வந்தவர்களின் ஆவணங்களை வாங்கி பரிசோதனை செய்த இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிவப்புக் கொடி காட்டியுள்ளனர். அவர்கள் காட்டிய ஆவணங்களில் இது சீனாவின் ஷாங்காய் ஜே.எஸ்.இ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்திருக்கும் பாகிஸ்தான் விங்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்ற கப்பலில் ராணுவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை சென்று சேரும் பாகிஸ்தான் விங்க்ஸ் என்ற நிறுவனத்தின் இணையதளத்தை ஆராய்ந்தபோது, அது ஒரு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் லாஜிஸ்டிக் நிறுவனம் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆய்வில் இறங்கிய போது 22,180 கிலோ எடை கொண்ட இந்த சரக்கு சீனாவின் தயுவான் என்ற நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பாகிஸ்தானில் இதை பெறும் நிறுவனத்தின் பெயர் காஸ்மோஸ் இன்ஜினியரிங். இந்த காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கி வருகிறது.
அந்தப் பெயரை மறைத்து பாகிஸ்தான் விங்ஸ் என்ற பெயரிலேயே இது அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் விங்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இதுபோன்று ராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்து வருவதாக பல நாட்களாக இந்திய அதிகாரிகள் சந்தேகித்து வந்திருந்த நிலையில் இது தற்பொழுது உறுதியாகி இருக்கிறது. இந்த நிறுவனம் தடை செய்யப்பட்ட பல்வேறு உபகரணங்களை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக சீனா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாக உபகரணங்கள் வருகின்றன." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications