மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 2-வது வாரத்தில் 2 கட்டங்களாக நடைபெறும்: சிஎம் ஷிண்டே தகவல்
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தகவல் வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் பதவிக் காலம் அக்டோபரில் முடிவடைகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுடன் மகாராஷ்டிராவுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையமோ, ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது.

இருந்த போதும் மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஜரூராக களமிறங்கிவிட்டன. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி, மகாயுதி கூட்டணியில் பாஜக 140 முதல் 150 இடங்களிலும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு 80, அஜித் பவாரின் என்சிபிக்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன. இந்தக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் என்சிபி, காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். ஆனால் சிவசேனாவை உடைத்த பாஜக, உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்தது. பின்னர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து சரத்பவாரின் என்சிபியையும் உடைத்தது. என்சிபியை உடைத்துக் கொண்டு பாஜகவுடன் கை கோர்த்த அஜித் பவார் துணை முதல்வராக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் இந்த தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாழ்வா சாவா என்கிற நிலைமைதான்.
இந்த பின்னணியில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 2-வது வாரத்தில் 2 கட்டங்களாக நடைபெறக் கூடும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேர்தல் தேதி தொடர்பாக அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications