ஒரு ஓபிசி 10 ஆண்டுகளாக நாட்டை ஆள்வதை காங்கிரஸால் ஏத்துக்க முடியல.. மகாராஷ்டிராவில் மோடி ஆவேசம்!
மும்பை: பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் நாட்டை 10 ஆண்டுகளாக ஆள்வதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று, மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றன.

பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாந்தேட் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், "ஒரு ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவன் பத்து ஆண்டுகள் பிரதமராக இருப்பதையும், நாட்டை வழிநடத்திச் செல்வதையும் ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை வெறுக்கிறது. பட்டியலினத்தவர், பழங்குடியினர்மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையேயான பிரிவினையை காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயங்களுக்காக வளர்த்து வருகிறது.
அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக இணைந்துவிட்டதால் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக தனது ஆதரவு தளத்தை இழந்து வருகிறது. ட்டியலினத்தவர், பழங்குடியினர்மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வெவ்வேறு பிரிவாகப் பிரிப்பதுதான் காங்கிரஸின் திட்டம். காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி சமூகங்களை சிறு சாதிகளாகப் பிரித்து அவர்களின் ஒற்றுமையின் அதிகாரத்தைப் பறிக்க விரும்புகிறது. அது நடந்தால், இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்துவிடும்
பல தசாப்தங்களாக இந்த பிரித்தாளும் தந்திரங்களின் வாயிலாக காங்கிரஸ் கட்சி குளிர்காய்ந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு முதல் ராஜீவ் காந்தி வரையிலான காங்கிரஸ் தலைவர்கள் மக்களை ஜாதிவாரியாகப் பிரித்து இடஒதுக்கீடு உரிமைகளைப் பறித்தனர்" என பிரதமர் மோடிவிமர்சித்துள்ளார்.
மேலும், பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மீண்டும் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். லோக்சபா தேர்தலில், நாந்தேட் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இப்போது நீங்கள் எங்களை ஆசீர்வதிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஹரியானா தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியைப் பெற்றது. வரவிருக்கும் தேர்தலில் மகாராஷ்டிரா மக்கள் வரலாற்றை மீண்டும் ஏற்படுத்த உள்ளனர் என்று தெரிவித்தார் மோடி.
மேலும் மகாராஷ்டிராவில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் எந்த மாநிலத்தில் ஆட்சி அமைத்தாலும், அந்த மாநிலம் காங்கிரஸ் குடும்பத்தின் ஏ.டி.எம் மெஷின் போல மாறிவிடுகிறது. தற்போதைய சூழலில் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் காங்கிரஸின் ஏ.டி.எம்களாக செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா தேர்தலை குறி வைத்து, கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.700 கோடியை வசூல் செய்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications