பீகாரில் மரண அடி வாங்கியும் மாறல? மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளை கழற்றிவிடும் காங்கிரஸ்! ஏன் இப்படி
மும்பை: பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதற்கிடையே மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் சீக்கிரமே உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குக் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அப்படித் தனித்துப் போட்டியிட்டால் அது பாஜகவுக்கே சாதகமாகப் போகும் என தாக்கரே சிவசேனா எச்சரித்துள்ளது.
இந்தியாவின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்று மும்பை.. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் சீக்கிரமே உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. அங்குக் கடைசியாக 2017ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால் 2022ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்
இருப்பினும், சில காரணங்களால் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது மகாராஷ்டிராவில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மும்பைக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையே அங்குக் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிராவில் இப்போது காங்கிரஸ் தாக்கரே சிவசேனா மற்றும் சரத் பவார் என்சிபி உடன் கூட்டணியில் இருக்கிறது. ஆனாலும், இந்த முறை காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றே தெரிகிறது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு இருப்பதாக மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெரிவித்தார். உள்ளூர் தலைவர்கள் மற்றும் மத்திய தலைமையுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சச்சின் சாவந்த் தெரிவித்தார்.
காங்கிரஸ் எடுத்த முடிவு?
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் ஒருபோதும் தனது கொள்கையில் சமரசம் செய்து கொண்டதில்லை.. அரசியலமைப்பு வலியுறுத்தும் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பண்பைக் காங்கிரஸ் எப்போதும் விட்டுக்கொடுக்காது. ஆனால் ராஜ் தாக்கரே கட்சி மொழியை வைத்து அரசியல் செய்கிறது. மராத்தி அடையாளத்தை வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். அவர்களை நாங்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வந்துள்ளோம்.
மராத்தி அடையாளத்தைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால், பிற மொழிகளை அவமதிக்கும் அல்லது பிற மக்களைத் தாக்கும் எந்த அரசியலையும் எங்களால் ஏற்க முடியாது." என்று கூறினார். மேலும், ராஜ் தாக்கரே கட்சியினர் புலம்பெயர் தொழிலாளர்களையும் வேறு மொழி பேசுபவர்களையும் தாக்கிய சம்பளங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனித்து போட்டி
புலம்பெயர்ந்தோரை 'அந்நியர்கள்' என்று அழைப்பது பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களை மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலிருந்து மும்பைக்கு வந்தவர்களையும் காயப்படுத்துவதாக சச்சின் சாவந்த் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறிப் பிற மாநிலங்களில் இருப்போர் இதன் விளைவுகளை எதிர்கொள்வதாகவும் அவர் சாடினார். இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டே மும்பை உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அவர் கூறினார்
இதற்கிடையே மும்பை உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தனது முடிவைக் காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தாக்கரே சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ நாளேட்டில் முக்கிய கட்டுரை வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பாஜகவுக்கு மட்டுமே உதவும் என்றும் இது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்றும் தாக்கரே சிவசேனா எச்சரித்துள்ளது.
எச்சரிக்கும் சிவசேனா
அந்தக் கட்டுரையில் மேலும், "பாஜக என்ன விளையாட்டை எல்லாம் விளையாடும் என்பதற்கு பீகார் தேர்தல் முடிவுகள் சாட்சி. யாருக்கு என்ன சித்தாந்தம் என்பதைச் சிந்திப்பதற்கான நேரம் இதுவல்ல. இதனால் எதிர்க்கட்சிக்கு வரும் வாக்குகள் பிரியும். எனவே நாங்கள் ஒற்றுமையாகப் போராட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜ் தாக்கரே தலைமையிலான எம்என்எஸ் கட்சியையும் இந்தக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றும் அது கூட்டணியை வலிமையாக்கும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இருப்பினும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியைக் கூட்டணியில் சேர்க்கக் காங்கிரஸ் தயங்குகிறது. ராஜ் தாக்கரேயை கூட்டணியில் இணைத்தால் மாற்று மொழி பேசுவோர், மற்ற மாநிலங்களில் இருந்து செட்டில் ஆனோர் வாக்குகள் கிடைக்காமல் போகலாம். மேலும், முஸ்லீம் வாக்குகளும் கூட குறையலாம் என்பதாலேயே காங்கிரஸ் குழப்பத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications